சிறுமியை கோமாவில் இருந்து மீட்ட இசை:கேரளாவில் அதிசயம்

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் ராஜு. இவர் ஒரு மீனவர். இவருடைய மகள் ராதிகா ( 6). கடந்த மே மாதம் நடந்த விபத்து ஒன்றில் சிக்கிய ராதிகா கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து அவர் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஒரு மாத காலத்திற்கும் மேலாக சிகிச்சை அளித்தும் சிறுமி கோமாவிலேயே தான் இருந்தார்.
இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டர் கிரிஜா இசை தெரபி என்னும் சிகிச்சையை அளிக்க திட்டமிட்டார். இசையால் நோயை குணப்படுத்தும் முறையில் ராதிகாவுக்கு பிடித்த பாடலை தினமும் ஹெட்போன் மூலம் கேட்க வைத்தார்.
கர்நாடக இசை உள்ள மெல்லிசைத் திரைப் பாடல்களும், ராதிகாவுக்கு மிகவும் பிடித்த “கிருஷ்ணா" என்ற பாடலையும் அடிக்கடி ஒலிக்க செய்தார்.
இந்த முறையின் பலனை ராதிகா அடைந்துவிட்டார். சுயநினைவின்றி இருந்த சிறுமிக்கு தற்போது நினைவு திரும்பி உள்ளது. இது மட்டுமின்றி அவர் உடல் நிலையும் நாளுக்கு நாள் தேறி வருகிறது.
இது குறித்து டாக்டர் கிரிஜா கூறியதாவது:
ராதிகாவுக்கு நாங்கள் பல்வேறு சிகிச்சை அளித்தும் எந்தவித பலனும் இல்லாமல் போனது. எனவே, மாற்று சிகிச்சை செய்தால் என்ன என்று நினைத்தேன். அது பற்றி இணையதளத்தில் தகவல்களை தேடினேன்.
அப்போது தான் கோமாவில் இருப்பவர்களுக்கு இசை தெரபி என்னும் சிகிச்சை அளித்தால் நரம்பு மண்டலங்கள் சீராகி நினைவு திரும்பும் என்பதை அறிந்தேன். இதையடுத்து ராதிகாவுக்கு பிடித்த பாடல்களை தொடர்ந்து கேட்க செய்தோம். இதில் மூளை நரம்பு சரியாகி அவர் கோமாவில் இருந்து மீண்டுவிட்டார் என்றார்.
இசையாமல் வசமாகா இதயம் எது...?












Click it and Unblock the Notifications