சூலமங்கலம் சகோதரிகளில் ஒருவரான சரஸ்வதி மரணம்
சென்னை: கந்தசஷ்டி கவசம் பாடிய சூலமங்கலம் சகோதரிகள் எனப்படும் ஜெயலட்சுமி - ராஜலட்சுமி ஆகியோரின், இன்னொரு சகோதரியும் பரத நாட்டியக் கலைஞருமான சரஸ்வதி நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68. புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் சரஸ்வதி.
கந்தசஷ்டி கவசம் தவிர, அபிராமி அந்தாதி மற்றும் சினிமாவிலும் சில பாடல்களைப் பாடியுள்ளவர்கள் சூலமங்கலம் சகோதரிகள். இசைவளர்த்த நங்கையர்கள் என்று போற்றப்பட்டவர்கள். இவர்களில் ஒருவரான ராஜலட்சுமி கடந்த 1992-ம் ஆண்டு மரணம் அடைந்து விட்டார்.
சரஸ்வதி, கடந்த 2 வருடங்களாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல், நேற்று பிற்பகல் 2-30 மணிக்கு மரணம் அடைந்தார். அவருடைய உடலைப் பார்த்து மூத்த சகோதரி ஜெயலட்சுமி கதறி அழுதார்.
மரணம் அடைந்த சரஸ்வதியின் உடல் தகனம், சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்சார மயானத்தில், இன்று நடக்கிறது.












Click it and Unblock the Notifications