பெங்களூரில் டிச. 11ல் நள்ளிரவு மாரத்தான்: பதிவுக் கட்டணம் ரூ. 300
இந்த நிகழ்ச்சிக்கு ரோடரி பெங்களூர் ஐடி காரிடர் (ஆர்பிஐடிசி) ஏற்பாடு செய்துள்ளது. இதில் 42 கிமீ நள்ளிரவு மாரத்தான், 21 கிமீ பாதி மாரத்தான், 4.2 கிமீ ஐடி நகர ஓட்டம், சமுதாய ரிலே ஓட்டம், பெண்களுக்கான கார்பரேட் ரிலே மற்றும் ரோடரி ரிலே நடக்கவிருக்கிறது.
ஆர்பிஐடிசி 4-வது முறையாக இந்த நள்ளிரவு மாரத்தானை நடத்துகிறது. இது தான் உலகிலேயே முதன்முதலாக நள்ளிரவில் நடத்தப்படும் மாரத்தான் ஆகும்.
டிராக் நெடுகிலும் பெரிய வீடியோ ஸ்கிரீன்களுக்கும், அலங்கார விளக்குகளுக்கும், ராக் பான்ட்களின் கச்சேரிக்கும் மற்றும் உணவுக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆர்பிஐடிசி-ன் சமூக சேவை திட்டத்திற்கு நிதி திரட்டவே இந்த நிகழ்ச்சி. இந்த நிதி சுற்றுச்சூழல் சுகாதாரம் நிறைந்த சமூகத்தை உருவாக்கவும், ஒயிட்பீல்டிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் இதர சேவைகளைச் செய்யவும் பயன்படுத்தப்படும்.
நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:
ஐடி நகர ஓட்டம்
இதில் ஓட விரும்புவர்கள் ஓடலாம், நடக்க விரும்புபவர்கள் நடக்கலாம். 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் தான் இதில் பங்கேற்க முடியும்.
சமுதாய ரிலே
இதில் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
ரோடரி ரிலே
இதில் பெங்களூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ரோட்டரி கிளப்களைச் சேர்நதவர்கள் கலந்து கொள்ளலாம்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கார்பரேட் ரிலே
இதில் பெங்களூரில் உள்ள கம்பெனி ஊழியர்கள் அணிகள் கலந்து கொள்ளலாம். இதில் ஒவ்வொரு அணியிலும் 8 பேர் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் 4. 2 கிமீ தூரம் ஓட வேண்டும்.
இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.ticketcounters.com என்ற இணையதள்ததில் இருக்கும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். இல்லையெனில் ஃபோரம் அல்லது மந்த்ரி மால்களில் உள்ள உதவி மேசையில் பதிவு செய்யலாம். இதற்கான கட்டணம் ரூ. 300 ஆகும்.