நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆனி தேரோட்டம்
நெல்லை: நெல்லை, அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆனி தேரோட்டம் நடைபெறுகிறது.
நெல்லையப்பர் கோவிலில் இந்த ஆண்டு ஆனி தேரோட்டம் கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, ரதவீதியுலா ஆகியவை நடந்து வருகிறது.
நெல்லையப்பர் கோவிலில் சாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் என 5 தேர்கள் உள்ளன. சுவாமி தேர் தமிழகத்தின் 3வது பெரிய தேராகும். இந்த தேரின் எடை 450 டன், அகலம் 28 அடி, நீளம் 28 அடி, உயரம் அலங்கார தட்டுகளை சேர்த்து சுமார் 70 அடி. இத்தகைய சிறப்புகளை உடைய 506வது ஆனிதேரோட்டம் நாளை காலை நடக்கிறது.
இதை முன்னிட்டு தேர்களை அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 3.15 மணிக்கு சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளுகின்றனர். காலை 8.15 மணி அளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயராமன், அறநிலைய துறை ஆணையர் புகழேந்திரன், துணை ஆணையர் முத்து தியாகராஜன், உதவி ஆணையர் பச்சையப்பன் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
முன்னதாக அதிகாலை 3 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவர் தேர்கள் இழுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications