அதிகாரிகள் மெத்தனத்தால் சட்டவிரோதச் செயல்களின் மையமாகும் பண்ணாரி வனச்சரகம்
பண்ணாரி: ஈரோடு மாவட்டம் பண்ணாரி வனச் சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதால் வன வளம் பாழ்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்கள் அங்கு நடக்கிறதாம்.
தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்களில் பண்ணாரி அம்மன் கோவிலும் ஒன்று. நேற்று அமாவாசை என்பதால் அந்த பகுதி மக்களும், சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் கோவிலில் சாமி தரிசனம் செய்யச் சென்றனர்.
கோவிலில் சாமி தரிசனம் முடித்து களைப்பிற்காக வனச்சரகம் அனுமதித்துள்ள டீக் கடையில் டீ குடிக்கச் சென்றால் அங்கு பிளாஸ்டிக் கப்பில் டீ தருகின்றனர். இதில் விந்தை என்னவென்றால் அங்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்டுத்த வனத்துறை தடைவித்துள்ளது.
ஆனால் வனத்துறை அனுமதி பெற்று டீத்தூள் மட்டும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட கடையில் பான்பராக், சிகரெட், போதை தரும் வஸ்துகள் மற்றும் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதைக் கண்டு வியக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் இந்த விவகாரத்தை அந்தப் பகுதி டி.எப்.ஓ. ராமசுப்பிரமணியின் கவனத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர். ஆனால் டி.எப். ஓ. உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என்று கூறப்படுகின்றது.
எனவே, வனத்துறையில் நடக்கும் அவலத்தைப் போக்க தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் இந்த பகுதிக்கு ஒரு முறை ரகசியமாக வந்தால் இன்னும் பல்வேறு சட்டவிரோத செயல்கள் குறித்த தகவல்கள் வெளிவரும் என உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications