கடவுளின் அருகில் நிற்பவர்கள் கலைஞர்கள்-மம்முட்டி
திருவனந்தபுரம்: கடவுளுக்கு அருகில் மிக நெருங்கி நிற்பவர்கள் கலைஞர்கள் என்று கூறியுள்ளார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி.
குமரி-கேரள எல்லையில் திருவனந்தபுரம் அருகே உள்ளது சாந்தகிரி பர்ணசாலை. இதன் சமர்ப்பண விழாவை முன்னிட்டு இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று சிறப்பிக்கும் கலாஞ்சலி நிகழ்ச்சியின் தொடக்க விழா நடந்தது.
நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நடிகர் மம்முட்டி பேசுகையில்,
கடவுளுடன் மிக நெருங்கி நிற்பவர்கள் கலைஞர்கள் ஆவர். நமது பண்பாட்டின் அடையாளம் கலையாகும். பராம்பரியமாக நம்மை பின்தொடர்ந்து வருவது கலையும், பண்பாடும் மட்டுமே, கடவுளுடன் கலைஞர்கள் நெருங்கி நின்றாலும் கலையும், கலைஞர்களும் முழுமை பெறுவதில்லை.
கடவுள் மட்டுமே முழுமை. அனைத்தும் கடவுள் படைப்பாகும். மனிதர்களை போன்று பிற உயிர்களும் கடவுளின் படைப்பு என்பதை உணர செய்வது தான் பண்பாடு.
மனிதன் மட்டுமின்றி அனைத்து உயிர்களும் கடவுளை நினைக்கின்றன. ஆனால் மனிதன் மட்டுமே தனக்கு ஏற்றவாறு கடவுளை வழிபட்டு வாழ்கிறான் என்றார் மம்முட்டி.
தொடர்ந்து பாடகர் ஜேசுதாஸ் இசைநிகழ்ச்சியும், சூரியா கிருஷ்ணாமூர்த்தியின் நாட்டிய நாடகமும், மற்றும் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிபிடி, ஓடிசி, கதகளி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.












Click it and Unblock the Notifications