வள்ளியூர் அருகே 1000 ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு
வள்ளியூர்: வள்ளியூர் அருகே ராஜாக்கமங்கலம் ஊராட்சியில் நம்பியாறை ஓட்டிய கிராமங்களில் 1000 ஆண்டுகள் பழமையான ஒரு கோயிலை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அதிலிருந்து 56 சிலைகளை தோண்டு எடுத்துள்ளனர்.
இரணியன் என்ற அரசன் ஆட்சி செய்த பகுதிதான் இரணியன் படுகளம். இது காலப்போக்கில் இரணியன் குடியிருப்பு என மாறிவிட்டது. இங்கு பாண்டியர் காலத்தை சேர்ந்த பல சிலைகள் ஊருக்குள், ஆற்று படுகைக்குள்ளும் சிதிலமடைந்து ஆங்காங்கே கிடந்தன.
இந்த பகுதியி்ல் தமிழக தொல்லியல் துறையினர் கடந்த 2 மாதங்களாக அகழ்வராய்ச்சி செய்து வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் தெரிய வந்துள்ளன. இதுவரை இந்த பகுதியில் இருந்து 56 சிலைகள் கிடைக்கப் பெற்றுள்ளன. எனவே இந்த பகுதியில் பெரிய சிற்ப கூடமோ, அல்லது பெரிய கோயிலோ இருந்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த பகுதிகள் நம்பியாற்று படுகையில் உள்ளதால் பெரிய வணிக தளமாக இருந்திருக்ககூடும் எனவும், தமிழர்களின் பண்பாடு மட்டுமின்றி அவர்களின் வணிகம் சார்ந்த பல வரலாறுகள் ஆராய்ச்சியில் தெரிய வரும் என்கின்றனர்.
இங்கு பெரிய நரசிம்மர் சிலை, முருகன் சிலை, தாய்மார் எழுவர் என பல சிலைகள் கிடைத்துள்ளன. இங்கு கோள்கள் பற்றியும், ஜோதிடம் சார்ந்த சிலைகளும் காணப்படுகின்றன. இவைகளில் வட்ட எழுத்துகள் பல உள்ளன. இந்த சிலைகள், 8ம், 9ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications