திருவண்ணாமலையில் நாளை மகா தீபம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் 18-ந் தேதி மகா தேரோட்டம் நடந்தது.
தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதற்காக அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. முன்னதாக பஞ்ச மூர்த்திகள் பலிபீடம் அருகே அழைத்து வரப்படுவார்கள். பின்னர் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் இருந்து ஆடிய படியே பலி பீடத்தின் அருகே வருவார்.
அர்த்தநாரீஸ்வரர் வந்ததும் பலி பீடம் அருகே அகண்ட தீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலை உச்சியிலும் மகா தீபம் ஏற்றப்படும்.
மகா தீபம் ஏற்றியதும் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், கடைகளிலும் அகல்விளக்கு ஏற்றுவார்கள்.
3500 கிலோ நெய்...
மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரையை கோவில் ஊழியர்கள் இன்று காலை மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். மகாதீபம் ஏற்றப்படுவதற்கு 3 ஆயிரத்து500 கிலோ நெய்யும், 100 மீட்டர் திரியும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மகா தீபத்தை தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இப்போதே திருவண்ணாமலைக்கு வந்து விட்டனர். மாடவீதிகளில் பக்தர்கள் வெள்ளமாகவே காட்சியளிக்கிறது.
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் இந்த தீபத்தை பல ஊர்களிலிருந்தும் பார்க்க முடியும்.
பலத்த பாதுகாப்பு...
மகா தீபத்தின் போது சுமார் 18 லட்சம் முதல் 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று போலீசாரால் கணிக்கப்பட்டுள்ளது. அதற்கான பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த முறை கம்ப்யூட்டர் உதவியுடன் இயங்கும் அதி நவீன டிஜிட்டல் முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோவில் உள் வளாகத்திலும், மாட வீதிகளிலும் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து திசைகளிலும் சுழலக்கூடிய 3 கேமராக்களும் பொருத்தப்படுகிறது.
45 இடங்களில் எல்.சி.டி. திரையில் மகா தீபம் ஒளிபரப்படுகிறது. 5 இடங்களில் மெகா திரை வைக்கப்படுகிறது.மகாதீபம் ஏற்றப்படும் மலையில் 150 கமாண்டோ படை வீரர்களும், 150 தமிழ் நாடு சிறப்பு அதிரடிப்படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
11 இடங்களிலும் புறக்காவல் நிலையங்களும், 22 இடங்களில் தனியார் உதவியுடன் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோவில் பாதுகாப்பு பணிக்காக மட்டும் அரசு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications