யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலுக்கு சாந்திநிகேதன், மேற்குத் தொடர்ச்சி மலை பரிந்துரை
புது டெல்லி: நோபல் பரிசு பெற்ற தாகூர் நிறுவிய விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் இருக்கும் சாந்தி நிகேதனையும், மேற்குத் தொடர்ச்சி மலையையும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இந்தியா பரிந்துரை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலாச்சாரப் பிரிவில் கொல்கத்தாவில் இருந்து 180 கிமீ தூரத்தில் இருக்கும் சாந்திநிகேதனையும், இயற்கைப் பிரிவில் மேற்குத் தொடர்ச்சி மலையையும் சேர்த்துக் கொள்ளும்படி இந்திய கலாச்சார அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து கலாச்சார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது,
யுனெஸ்கோ அதிகாரிகள் ஏற்கனவே சாந்திநிகேதன் பற்றி ஆய்வு நடத்தியுள்ளனர்.
தாகூர் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தை கடந்த 1901-ம் ஆண்டு சாந்திநிகேதனில் நிறுவினார். இங்கு அவர் வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல் பல இலக்கியங்களையும் எழுதியுள்ளார். இது முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகின்றது.
மேற்குத் தொடர்ச்சி மலை குறித்த ஆய்வு இனிமேல் தான் நடக்கவிருக்கிறது. இந்த பரிந்துரை பற்றி யுனெஸ்கோ அடுத்த ஆண்டு முடிவு செய்யும்.
ஜெய்பூரில் உள்ள ஜந்தர் மந்தரை இந்தியா யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்த்தது. இது 18-ம் நூற்றாண்டில் ஒரு ஜெய்பூர் மன்னனால் கட்டப்பட்டது.
தாஜ் மகால், செங்கோட்டை, குதுப் மினார் உள்ளிட்ட 30 இந்திய இடங்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் உள்ளது என்று அவர் கூறினார்.