கூந்தன்குளத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : 2 லட்சம் பறவைகள் வரும் என்று எதிர்பார்ப்பு
நெல்லையில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் கூந்தன்குளம் உள்ளது. இந்த கிராமம் கடந்த 1994-ம் ஆண்டு முதல் பறவைகள் சரணாலயமாக செயல்பட்டு வருகிறது. கூந்தன்குளத்திற்கு சைபீரியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன.
பின்டைல், பிளாக்விங்டு, ஸ்டில், கிரேகிரான், கிரின்சங், கார்கனி உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகளும், கரண்டிவாயன், செங்கால்நாரை, வெள்ளைஅரிவாள் மூக்கன், கூழைக்கிடா, நீர்காகம், பட்டதலைவாத்து, சாம்பல் நாரை உள்ளிட்ட உள்நாட்டு பறவைகளும் கூந்தன்குளத்திற்கு சீசன் காலத்தில் வருகின்றன.
அங்குள்ள குளம் மற்றும் ஊர் பகுதிகளில் உள்ள மரங்களில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் இப்பறவைகள் சீசன் முடிந்த பின்னர் தாயகம் திரும்பும். வெளிநாடுகளில் குளிர் காலம் ஆரம்பிக்கும்போது இனப்பெருக்கத்திற்காக இப்பறவைகள் இடம் பெயர்ந்து கூந்தன்குளம் வருகின்றன. ஜனவரி மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை கூந்தன்குளத்தில் தங்கியிருந்து செல்கின்றன.