குற்றாலநாதர் கோவிலில் யாகசாலை பூஜை தொடக்கம்: ஆக. 27ல் கும்பாபிஷேகம்
குற்றாலம் திருக்குற்றாலநாதசாமி கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சைவ சமய பெரியோர்களால் பாடப்பட்ட திருத்தலம் ஆகும். தமிழகத்தில் உள்ள பஞ்ச சபைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சித்திரசபை இங்கு தான் உள்ளது.
சிறப்பு மிக்க இக்கோவிலில் திருப்பணி குழு, அறங்காவலர் குழு, உபயதாரர்கள் அரசின் உதவியுடன் ரூ. 1 கோடி செலவில் திருப்பணிகள் செய்துள்ளனர்.
இதையடுத்து வரும் 27-ம் தேதி காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் குழல்வாய்மொழி அம்மன் உடனுறை குற்றாலநாதசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேக தினமான 27-ம் தேதி அன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை, நாடி சந்தானத்தை தொடர்ந்து காலை 8 மணிக்கு கடம் எழுந்தருளலும், சித்தரை சபை விமானம் மற்றும் மூலஸ்தானத்திற்கு கும்பாபிஷேகமும், 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் குற்றாலநாதசாமி மற்றும் குழல்வாய்மொழி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.
மதியம் அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.