சத்தியமங்கலம் அருகே ரூ. 5 லட்சம் மதிப்புள்ள திப்பு சுல்தான் காலத்து தங்க நாணயங்கள் கண்டெடுப்பு
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பூமியல் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க நாணய புதயல் ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தி தாலுகா கோட்டமாளம் பகுதியை சேர்ந்தவர் மாதி. இவரது பேத்தி வினிதா கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டை சுற்றியுள்ள செடி கொடிகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது மண்ணின் அடியில் இருந்து மண் குடுவை ஒன்று தெரிந்துள்ளது. அதை எடுத்து பார்த்த போது, அதில் நிறைய தங்க நாணயங்கள் இருந்தது.
இந்த தகவல் காட்டுத் தீ போல் அக்கம் பக்கத்தில் பரவியதால், அப்பகுதி மக்கள் தங்க நாணயத்தை பார்க்க படையெடுத்து வந்தனர்.
தகவல் அறிந்த சத்தியமங்கலம் தாசில்தார் சண்முகம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு விசாரணை நடத்தி, புதையலில் இருந்த 400 மில்லி கிராம் எடை கொண்ட சுமார் 744 வட்ட வடிவிலான தங்க நாணயங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் கொடி உருவமும் மற்றொரு பக்கத்தில் எட்டு சிறிய புள்ளிகளும், இரு பெரிய புள்ளிகளும், இரு அரை வட்ட நிலா தோற்றமும் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 5 லட்சம். இவை திப்பு சுல்தான் காலத்து நாணயங்கள் எனக் கருதப்படுகிறது.
இதையடுத்து இந்த காசுகள் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.