திருப்பதி லட்டில் உப்பு கலந்து தயாரித்த 3 பேர் டிஸ்மிஸ்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்கும்போது உப்பைக் கலந்த 3 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி என்றால் நம் நினைவுக்கு வருவது இனிக்கும் லட்டு. ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர் பெருமக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் லட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் லட்சக் கணக்கான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இது திருப்பதியில் தினமும் நடக்கும் ஒன்றாகும்.
இந்நிலையில் கடந்த 26-ம் தேதி ஒரு லட்சத்து 4 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டன. அதில் 1700 லட்டுகள் நேற்று லட்டு விநியோக மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. லட்டுகளை பார்த்த உடனே அங்கிருந்த ஊழியர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு காரணம் லட்டுகளின் நிறம் வழக்கத்திற்கு மாறாக இருந்தது தான். உடனே விநியேக மைய ஊழியர்கள் இது குறி்த்து கோவில் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
தகவல் அறிந்த அவர்கள் லட்டுகளை சோதனை செய்ததில் உப்பு கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி இதற்கு காரணமான தற்காலிக ஊழியர்கள் 3 பேரை கோவில் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
இந்த சம்பவத்தால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications