பெரியார் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும்: வழக்கறிஞர் துரைசாமி
சென்னை: பெரியாரின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்று அவரிடம் வழக்கறிஞராகப் பணியாற்றிய துரைசாமி கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
1970ம் ஆண்டு முதல் பெரியாரின் மறைவு வரை அவரது வழக்கறிஞராக பணியாற்றினேன். பெரியாரின் சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்யும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர்.
பெரியார் தனது சொத்துக்களை தனிப்பட்ட நபர்களுக்கோ அல்லது எந்த நிறுவனத்துக்கோ வழங்குமாறு அவர் உயில் எழுதவில்லை.
இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின்படி, ஒருவர் தனது சொத்துக்களை யாருக்கும் எழுதி வைக்காமல் போய்விட்டால், அவர்களுக்கு யாரும் வாரிசு இல்லையென்று சொன்னால், அந்தச் சொத்துக்கள் அனைத்தும் அரசுக்கு சேர்ந்து விடும் என்று சட்டம் மிகத் தெளிவாக சொல்கிறது.
எனவே அந்தப் பிரிவை பயன்படுத்தி, பெரியாரின் சொத்துக்கள் அனைத்தையும் அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். இது குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
பெரியாரின் சொத்துக்களை ஏற்க அரசு முன்வராவிட்டால் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வேன் என்றார்.