கள்ளழகர் எதிர்சேவை- மதுரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வரவேற்பு
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கள்ளழகர் எதிர்சேவை இன்று மதுரையில் வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது.
மதுரை சித்திரைத் திருவிழா நிறைவுக் கட்டத்தை நெருங்கியுள்ளது. நாளை உச்ச கட்ட நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கவுள்ளது.
மதுரையில் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம், மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையடுத்து திருவிழாவின் 11ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, உச்சிக்கால பூஜை வரையுள்ள அனைத்து பூஜைகளும் அதிகாலை 3 மணிக்குள் செய்யப்பட்டன.
எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கவும், தேர்களை புனிதப்படுத்தவும் அதிகாலை 4 மணிக்கு தேர்களுக்கு ரதரோஹணம் பூஜை செய்யப்பட்டது. தேர்களை பாதுகாக்கும் தேரடி கருப்பு சுவாமிக்கு அதிகாலை 5 மணிக்கு பூஜை செய்து சுவாமியை பெரிய தேரிலும், அம்மனை சிறிய தேரிலும் எழுந்தருள செய்தனர்.
மாசி வீதிகளில் வலம் வந்து, காலை 11.45 மணிக்கு பெரிய தேரும், 11.50 மணிக்கு சிறிய தேரும் அடுத்தடுத்து நிலைக்கு வந்தன. பிற்பகல் 3 மணிக்கு மேல் கோவிலில் இருந்து சகல மரியாதைகளுடன் கீரிடம் மற்றும் தங்க நகைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, தேர்களில் வீற்றிருந்த சுவாமிக்கும், அம்மனுக்கும் அணிவித்து, கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஒரே நேரத்தில் பக்தர்கள் தங்களை தரிசிக்க வேண்டும் என்பதற்காக நேற்றிரவு 7.30 மணிக்கு சப்தாவர்ணச் சப்பரத்தில் அம்மனும், சுவாமியும் உலா வந்தனர். கோவிலுக்கு திரும்பிய பின் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று கோவில் பொற்றாமரைக் குளத்தில் தேவேந்திர பூஜையுடன் 12 நாள் சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.
தல்லாகுளத்தில் எதிர்சேவை
இந்த நிலையில், கள்ளழகர் திருக்கலோத்தில் அழகர் பெருமான் இன்று மதுரை நகருக்குள் பிரவேசித்தார். தங்கை மீனாட்சியின் திருமணத்தைக் காண மதுரைக்கு வருகிறார் அழகர். ஆனால் அவர் வருவதற்குள் திருமணம் முடிவடைந்து விடுவதால் அவர் கோபம் கொண்டு மதுரைக்குள் வராமல் ஆற்றோரமாகவே திரும்பிப் போய் விடுவதாக ஐதீகம்.
மதுரைக்கு வரும் அழகருக்கு நகரின் எல்லையில் வரவேற்பு அளிக்கப்படும். இதற்கு எதிர்சேவை என்று பெயர்.
இன்று காலை மதுரை நகரின் எல்லைப் பகுதியான மூன்று மாவடிக்கு அழகர் வந்து சேர்ந்தார். அங்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தேறியது. தொடர்ந்து புதூர், ரிசர்வ் லைன் உள்ளிட்ட இடங்களிலும் எதிர்சேவை நடந்தது.
இறுதியாக இன்று இரவு தல்லாகுளத்தில் எதிர்சேவை நடைபெறுகிறது. இதையடுத்து நாளை காலை வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்.












Click it and Unblock the Notifications