செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கையெழுத்து பிரதி தமிழ் இலக்கியங்கள்
கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கையெழுத்து பிரதி தமிழ் இலக்கியங்களை கோவையைச் சேர்ந்த இருவர் உருவாக்கி வருகின்றனர்.
தமிழ் இலக்கியங்கள் பால் மக்களிடம் ஆர்வத்தை உருவாக்க கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் ஒரு நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை ஏ.பி.பவுண்டரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கோவை மாவட்ட துணை செயலாளருமான பெ.சக்திவேல் மற்றும் காரமடையைச் சேர்ந்த ஓவியர் பாவு சார்லஸ் ஆகிய இருவரும் இணைந்து எட்டாயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு தமிழ் இலக்கிய தொகுப்பு நூலை கையெழுத்து பிரதியாகவே உருவாக்கி வருகின்றனர்.
இதுகுறித்து சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழ் இலக்கியம் மக்களை சென்றடையாமல் உள்ளது. தொழில்நுட்பமும், ஆங்கில மயமும் அதிகரித்து வருகின்றது.
இந்த சூழலில் எங்களின் இந்த சிறிய முயற்சி மக்களிடம் தமிழ் இலக்கியங்கள் மீது ஆர்வத்தை உருவாக்கப் பயன்படும் என்று நம்புகிறோம்.
மனோன்மணியம் சுந்தரனார், தாயுமானவர், மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி, பெரிய புராணம், திருக்குறள் துவங்கி, சிற்றிலக்கியங்கள், பாரதியார் கவிதைகள், இசைத்தமிழ், நாட்டுப்புறத் தமிழ், கலைஞரின் குறளோவியம், ஜெயகாந்தன் படைப்புகள், சிற்பி, புவியரசு, மு.மேத்தா, அப்துல் ரகுமான் போன்றோர் படைப்புகள் வரை மொத்தம் 35 நூல்களை ஒரே நூலாக தொகுக்க உள்ளோம். இந்த நூலுக்கு அருந்தமிழ் என்று பெயர் வைத்துள்ளோம் என்றார்.
மே 2 ம் தேதி (ஞாயிறு) அன்று காலை 11 மணிக்குத் துவங்கிய இவர்களின் தொகுப்பு நூல் உருவாக்கும் பணியை வருகிற ஜூன் 13 ஆம் தேதி நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் இவர்களின் முயற்சி வெற்றியடையும்பட்சத்தில் உலகிலேயே அதிக பக்கங்கள் கொண்ட நூல் என்ற பெருமையை இது பெறும் .












Click it and Unblock the Notifications