பள்ளிகளில் செம்மொழிப் பாடல்-டிவிடி பிளேயர் இல்லாத பள்ளிகளில் ஆசிரியர்களே பாடினர்
நெல்லை: நெல்லை மாவட்ட பள்ளிகளில் இன்று காலை உலக தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் ஒளிபரப்பப்பட்டது. சிடி, டிவிடி பிளேயர் இல்லாத பள்ளிகளில் ஆசிரியர்களே பாடினர்.
உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் வருகிற 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டை சிறப்பிக்கும் வகையில் ஏஆர் ரஹ்மானின் இசையில் தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இனிமையான இசை, தமிழ் மொழியின் அருமை, பெருமைகளை விளக்கி பாடியுள்ள இந்த பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த பாடலை மாணவ, மாணவிகள் மத்தியில் கொண்டு செல்லும் விதமாக சிடி வடிவில் அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது.
ஒவ்வொரு நாளும் அனைத்து நர்சரி, தொடக்க,நடுநிலை. உயர் நிலை, மெட்ரிக், மேல்நிலைப்பள்ளிகளில் இறைவணக்கத்தின்போது தமிழ்தாய் வாழ்த்து பாடிய பின்னர் செம்மொழி மாநாட்டு பாடலை ஓளிபரப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நேற்றே சிடி அனுப்பி வைக்கப்பட்டது. இன்று காலை அனைத்து பள்ளிகளிலும், செம்மொழி மாநாட்டு பாடல் ஒளிப்பரப்பப்பட்டது. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பாடலை ரசித்தனர். ஒரு சில பள்ளிகளில் சிடி பிளேயர் இல்லை என்றாலும் பாடலை ஆசிரியர்களே பாடினர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்லூரி அலுவலர் மேரி ஜேசி ரோச் கூறுகையில், தமிழ் செம்மொழியின் பெருமைகளை விளக்கும் பாடல்கள் அனைத்து பள்ளிகளிலும் இன்று ஒளிபரப்பப்பட்டது என்றார்.