பட்டாசு இல்லாமலும் கொண்டாடலாமே தீபாவளியை
நரகாசுரன் அழி்ககப்பட்ட நாளை தீபாவளி என்று கொண்டாடுகிறோம். தீபாவளி பண்டிகை வருவதற்கு 2-3 வாரங்களுக்கு முன்பாகவே பட்டாசுகள் வெடிக்கத் துவங்கிவிடுவார்கள். பட்டாசுகளை முறையாக வெடித்தால் பிரச்சனை இல்லை. அதை விட்டுவிட்டு 'நாங்கள்லாம் மோசமானவங்கள்ளயே முக்கியமானவங்கே' என்பதைக் காட்டும் வகையில் கையில் வைத்துக் கொண்டும், தூக்கிப் போட்டும், வெடிப்பது ஆபத்தானது. இதனால் தீக்காயங்கள் தான் ஏற்படும்.
ராக்கெட்டுகள் விடும்போது அவை குடிசைகளில் சிக்கி அவை தீப்பற்றி எரியும். இதனால் ஏழை, எளிய மக்களின் தீபாவளி சோகமயமாகி விடும். பட்டாசை நடுரோட்டில் வைத்துவிட்டு அது வெடிக்கட்டும் என்று ஓரமாக நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள். அங்கு பட்டாசு இருப்பது தெரியாமல் சிலர் வருவார்கள். அந்த பட்டாசு வெடித்து அவர்களுக்குத் தான் காயம் ஏற்படும்.
சர வெடிகளை வெடிப்பார்கள். அதில் ஒன்று, இரண்டு வெடிக்காமல் இருக்கும். ஏன் வெடிக்கவில்லை என்று கையில் எடுத்து முகத்தின் அருகில் வைத்துப் பார்க்கையில் டமார் என்று வெடித்துவிடும். ஆட்டம் பாம் வெடிக்கச் செய்து அந்த தெருவில் உள்ளவர்கள் காது கிழியும் வரை விடுவதில்லை. பட்டாசுகள் வெடித்து முடித்துப் பார்த்தால் அந்த பகுதி முழுவதும் குப்பைக் காடாக கிடக்கும்.
முன்பெல்லாம் இந்த வெங்காய வெடி படுத்திய பாடு இருக்கே, அப்பப்பா... வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பார்கள். நடு ராத்தியில் சுவரில் வெங்காய வெடியை தூக்கிப் போட்டு வெடிக்க வைத்து பொடியன்கள் செய்யும் குறும்புத்தனத்தால் வீட்டுக்குள் இருப்பர்களுக்கு நெஞ்சு படபடப்பில் எகிறும். நல்லவேளை இப்போது அது இல்லை.
சிலர் பட்டாசை கொட்டாங்குச்சிக்குள் வைத்து வெடிப்பார்கள். பட்டாசு வெடித்ததும் கொட்டாங்குச்சி பறந்துபோய் யார் தலையிலாவது விழும். அதில் பட்டாசு வைத்தவர்களுக்கு அலாதி சந்தோஷம். அப்பாடா ஏதோ நம்மால் முடிந்தது, ஒருவர் மண்டை உடைந்துவிட்டது என்று.
இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக பட்டாசு இல்லாமல் தீபாவளி கொண்டாடிப் பாருங்களேன். அதற்காக பட்டாசே வேண்டாம் என்று சொல்லவில்லை. மத்தாப்பூ, புஸ்வானம், சங்குசக்கரம், பென்சில் வெடி, கலர் தீப்பெட்டி, பாம்பு மாத்திரை, சாட்டை ஆகியவற்றை விடலாம். இதன் மூலம் பட்டாசுத் தொழிலை நம்பியிருப்போருக்கும் வாழ்வு கொடுத்தது போலாகும்.