கொடைக்கானலில் 2வது 'ஜில்' சீசன்- புதுமணத் தம்பதிகள் படையெடுப்பு!

களை கட்டிய ஆப் சீசன்
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகுக்குப் பஞ்சமில்லை. காணும் இடமெங்கும் பசுமையும், ரம்மியமான சூழலும் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கின்றது. ஏப்ரல் முதல் ஜூன் வரை கோடை சீசன் காலத்தில் கொடைக்கானலுக்கு ஏராளமானோர் சுற்றுலா வருவது வாடிக்கை. செப்டம்பர் மாதம் இரண்டாம் கட்ட சீசன் தொடங்கிவிடும். இந்த ஆண்டு பருவமழையின் தாமதத்தினால் அக்டோபர் மாதம் சீசன் களை கட்டியுள்ளது.
ஹனிமூன் தம்பதிகள்
கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா மையங்களான கோக்கர் வாக்ஸ், பசுமை பள்ளத்தாக்கு, வெண் பஞ்சு மேகங்கள் தொட்டு விளையாடும் தூண்பாறை, உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. புதிதாக திருமணமான ஹனிமூன் தம்பதிகள் ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலைகளில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி செய்தும் உற்சாகத்துடன் பொழுதை கழிக்கின்றனர். காலை வேளையில் உடலை வருடும் சில்லென்ற காற்றும், வெயிலுடன் பன்னீர் தூவலாய் பெய்யும் மழையும் தங்கள் பயணத்தை இனிதாக்கியிருப்பதாக தெரிவித்தனர் ஹனிமூன் தம்பதிகள்.
வியாபாரிகள் மகிழ்ச்சி
கொடைக்கானலில் நிலவும் இதமான ஆப் சீசனை அனுபவிக்க புதுமணத்தம்பதிகள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணவிகளும் குவிந்து வருவதால் அங்கு சுற்றுலா தொழில் விறுவிறுப்படைந்துள்ளது. விற்பனை வருமானம் அதிகரித்துள்ளதால் சாலையோர சிறு வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications