ஐஸ்ஓ சான்றிதழ் பெற்று அசத்தும் கோவை மாநகராட்சி பள்ளிகள்
கோவை: கோவை மாநகராட்சி பள்ளிகள் ஐ.எஸ்.ஓ எனப்படும் சர்வதேச தரச்சான்றிதழ்களைப் பெற்றுள்ளன.
கோவை மாநகராட்சியில் 16 மேல் நிலைப்பள்ளிகள், 10 உயர்நிலை, 13 நடுநிலை, 42 ஆரம்பப்பள்ளிகள், ஒரு சிறப்புப் பள்ளி என மொத்தம் 82 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 30,000 மாணாக்கர்களுக்கு மேல் இப்பள்ளிகளில் பயில்கின்றனர்.
தனிக்கவனம்
மாநகராட்சி ஆணையாளராக அன்சூல் மிஸ்ரா பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்தே அரசுப்பள்ளிகளின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வந்தது. கடந்த நிதியாண்டில் கல்வித்துறை மேம்பாட்டிற்கென அதிக நிதியை ஒதுக்கியது மாநகராட்சி நிர்வாகம். கல்விக்குழுவின் பரிந்துரைகளின் படிஅறிவியல் மற்றும் கம்ப்யூட்டர் ஆய்வகம், நூலகம், குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு, கழிப்பிடம், ஒய்வறை, உணவருந்துமிடம், நாப்கின் மெஷின் மற்றும் இன்சினரேட்டர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் பள்ளிகளில் செய்தது.
ஆசிரியர்களும் சிறப்பாகச் செயல்பட்டதில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக பெரும்பாலான அரசுப் பள்ளிகளும் 10ஆம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்வுகளில் 100% தேர்ச்சி எனும் சாதனையை படைத்தன.
ஜெர்மன் நிறுவனம்
பள்ளிகளை ஆய்வு செய்து ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் வழங்கும் ஜெர்மன் நிறுவனம் கோவை மாநகராட்சியின் 8 மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஐ.எஸ்.ஒ 9001-2010 தரச்சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஆர்.எஸ்.புரத்தில் இருக்கும் மாநகராட்சி ஆண், பெண் இருபாலர் பள்ளி, மாநகராட்சி பெண்கள் (மேற்கு) பள்ளி, அம்மணியம்மாள் பள்ளி, ஒப்பணக்கார வீதி , ரங்கநாதபுரம், ராமகிருஷ்ணபுரம், சித்தாபுதூர், ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மாநகராட்சி பள்ளிகள் இந்தச் சாதனையை படைத்துள்ளன. தமிழகத்தில் மொத்தம் 600 பள்ளிகள் ஐ.எஸ்.ஒ தரச்சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications