குற்றாலம் சாரல் திருவிழா நாளை துவக்கம்- போட்டிகளுக்கு ஏற்பாடு
குற்றாலம்: குற்றாலம் சாரல் திருவிழா நாளை (23-ம் தேதி) ஆரம்பமாகிறது. இதனையொட்டி பல்வேறு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்றாலம் சாரல் விழா கலைவாணர் கலை அரங்கில் நாளை (23-ம் தேதி) மாலை 6 மணிக்கு ஆரம்பமாகிறது. அமைச்சர் கருப்பசாமி தலைமை வகிக்கிறார். சாரல் திருவிழாவை துவக்கி வைத்து அமைச்சர் கோகுல இந்திராவும், கலை நிகழ்ச்சிகளை துவக்கி வைத்து அமைச்சர் செந்தூர் பாண்டியனும் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
எம்.பி.க்கள் பால் மனோஜ்பாண்டியன், லிங்கம், எம்.எல்.ஏ. சரத்குமார் முன்னிலை வகிக்கின்றனர். கலெக்டர் நடராஜன் வரவேற்புரை ஆற்றுகிறார். இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். டி.ஆர்.ஓ. ரமண சரஸ்வதி நன்றி கூறுகிறார்.
இரவில் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ, மாணவிகளின் இசை சங்கமம், கேரள சிங்காரி மேளம், பரதநாட்டியம், ஸ்ரீகாந்த் தேவாவின் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. இந்த திருவிழா வரும் 30-ம் தேதி வரை நடக்கிறது. திருவிழா நடக்கும் 7 நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடக்கவிருக்கிறது.
வரும் 24-ம் தேதி குற்றாலம் கலைவாணர் அரங்கில் மதியம் 2.30 மணிக்கு ஆணழகன் போட்டி, 25-ம் தேதி மாலை 3 மணிக்கு குற்றாலம் நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டி, 26-ம் தேதி காலை 10.30 மணிக்கு இந்திய கலச்சார ஆடை, அலங்காரம் மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி, 28-ம் தேதி மதியம் 2 மணிக்கு நாய்கள் கண்காட்சி, 29-ம் தேதி மாலை 3 மணிக்கு பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி அருகில் ரோலர்ஸ்கேட்டிங், 30-ம் தேதி காலை 10.30 மணிக்கு படகு குழாமில் படகு போட்டி ஆகியவையும் நடக்கிறது.
வரும் 30-ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கும் நிறைவு விழாவிற்கு கலெக்டர் நடராஜன் தலைமை வகித்து படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசுகிறார்.












Click it and Unblock the Notifications