ஸ்ரீ ரங்கம் சொர்க்கவாசல் திறப்பு: லட்சக்கணக்காண பக்தர்கள் 'ரங்கா' முழக்கத்துடன் தரிசனம்
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பெருமையுடன் அழைக்கப்படும் சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 25-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று முதல் உற்சவர் நம்பெருமாள் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல்பத்து நிகழ்ச்சியின் நிறைவுநாளான புதன்கிழமை நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விண்ணை முட்டிய ரங்கா முழக்கம்
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு இன்று அதிகாலை 4.10 மணிக்கு நடைபெற்றது. அதிகாலை 3.15 க்கு, நம் பெருமாள் ரத்தினங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 4.30 மணிக்கு திருக்கொட்டகையில் பிரவேசித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் ரங்கா, கோவிந்தா கோஷம் முழங்க சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் இன்று நள்ளிரவு ஒருமணிவரை பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். இதனையடுத்து இரவு ஒருமணிக்கு மேல் மீண்டும் கருவறைக்குள் செல்கிறார்.
500 முதியவர்களுக்கு பாஸ்
வைகுண்ட ஏகாதசியையொட்டி, முதியவர்கள் 500 பேருக்கு இலவச பாஸ் வழங்கப்பட்டது. இதனால் நம்பெருமானை பரமபதவாசல் வழியாக சென்று தரிசித்த முதியவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் பிரசித்தி பெற்ற மூலவர் முத்தங்கி சேவை, இன்று காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.
சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்துள்ளதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 9 போலீஸ் சூப்பிரண்டுகள், 10 கூடுதல் சூப்பிரண்டுகள், 34 துணை சூப்பிரண்டுகள், 308 இன்ஸ்பெக்டர்கள், 14 தமிழ்நாடு சிறப்பு காவல்படை கம்பெனி என மொத்தம் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல்
சென்னையில் திருவெல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும், மயிலாப்பூர் மாதவப்பெருமாள் ஆலயத்திலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். இதேபோல் மதுரை கூடல் அழகர்பெருமாள் கோவில் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கரன்கோவில் சொர்க்கவாசல்
சங்கரன்கோவிலில் சிவனும், விஷ்னுவும் இணைந்து காட்சி தருவதால் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இன்று வைகுண்ட ஏகாதிசியை முன்னிட்டு அதிகாலை சங்கரநாராயணசாமி சன்னதியில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடந்தது. காலை 8 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சுவாமி பள்ளி கொண்ட பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.