Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மழை மழை துபாயில் பொழிந்த தமிழ் கவிதை மழை

Subscribe to Oneindia Tamil

துபாய்: வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் மகளிர் தின சிறப்பு விழா துபாய் கராமா சிவஸ்டார் பவனில் 22.03.2013 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

இன்பத் தமிழ்ப் பருக இதயத் தவிப்புடனே என்றும் காத்திருக்கும் அன்பு நெஞ்சங்களின் அணிவகுப்பு - வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பு என்பதை மற்றுமொருமுறை நிரூபித்து மகத்தான மகளிர்தின சிறப்புக் கவியரங்கமும் சீரியநல் விழாவாக அமைந்தது!

முதன் முறையாக முற்றிலுமாய் மகளிரை இடம்பெறச் செய்து அவர்தம் ஆட்சியில் மேடை அமைய.. ஆரம்பம் முதலாக கலைகட்டிய அரங்கமாய் ஆனது! "இது எங்கள் மேடை" என்கிற பெண்களின் ராஜ்ஜியம் நிகழ்ச்சியில் கொடிகட்டிப் பறந்தது!

It rained poetry in Dubai

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய திருமதி.ஸ்ரீதேவி சிங்கார வேலன் அவர்கள் தன் இனிய குரலால் சபை நிறைக்க.. திருவிழா தொடங்கியது. நிகழ்ச்சியைப் பொறுப்புடனே தொகுப்புரை வழங்கிட திருமதி.பொற்செல்வி கண்ணன் அச்சரம் பிசகாத அமைதிச் சொல்லெடுத்து ஒவ்வொரு கட்டத்திற்கும் நகர்த்தி சென்ற நேர்த்தி பிரத்யேக வார்த்தைகளால் பாராட்டப்பட வேண்டியது. பெண்ணுரிமைக்காக குரல்கொடுத்த முண்டாசுக் கவிஞன் பாரதிக்கு இந்த நிகழ்வைக் காணிக்கையாக்கியது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வந்தார் திருமதி.ஸ்வேதா கோபால் வரவேற்புரையாற்ற.. உங்கள் வரவை ஏற்கிறோம் என்கிற தொனியில் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு உள்ளம்தொட்டு அதற்கான வரிகளிட்டு அவர் தந்த உரை .. சொல்லப்போனால் அரங்கத்தில் பொழிந்த இன்பமழை!! சொற்கோலமிட்ட இவர், நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்ற மகளிர் ஒவ்வொருவரையும் பட்டுமெத்தை வார்த்தைகளால் வருடிய உரையானது வரவேற்புரை!

அரங்கம் அதிரும் கவியரங்கம் அடுத்து அங்கே ஆரம்பமானது! கள்ளம் கபடம் தானறியா துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தலைவி திருமதி.மீனாகுமாரி பத்மநாதன் அவர்களின் தலைமையில் எதார்த்தங்களின் வீச்சு! இன்பத்தமிழ் மூச்சு!! மடைதிறந்த வெள்ளமாய் ஓடி வந்தது தமிழ் ஆறு!! ஒவ்வொரு கவிஞரின் படைப்பையும் உள்ளம் திறந்து பாராட்டிட எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல்.. தானாய்ப் பொழிந்த தேன்மழை!!

கவிஞர்கள் வரிசையில் - தஞ்சாவூரான், இளையசாகுல், ஸ்வேதா, சித்ரா பிராஸ்பர், ஜியாவுதீன், காவிரிமைந்தன், மீனாகுமாரி பத்மநாதன், நர்கீஸ் பானு ஆகியோர் கவிதை வாசித்தனர். அனைவரின் கவனமும் ஈர்த்திடும் வகையில் அழகிய நல் கவியரங்கத் தலைமையேற்ற இவரிடம் என்ன ஆச்சரியம் தெரியுமா? அட.. இதுதான் இவர்தம் முதல் கவியரங்கத் தலைமையாம்! சாதிக்கப் பிறந்தவர் பெண்கள் என்பதை போதிக்கும் இவர்தம் குரல் வளமும் கவிதையில் ஆர்வமும் மகளிர்தின சிறப்பு விழாவில் தனி முத்திரை பதித்தது என்றால் மிகையில்லை! உயிர் மற்றும் ஓவியம் தலைப்புகளில் கவிஞர்கள் கவிதைகள் வழங்கிட.. அன்னையர் தினச் சிறப்புக் கவிதையை தஞ்சாவூரான் வழங்கி அனைவரின் பாராட்டைப் பெற்றார்.

சிறப்பு விருந்தினர் கெளரவிப்பு - திருமதி. ஸ்ரீதேவி சிங்காரவேலன் அவர்களுக்கு திருமதி. ஜெயாபழனி பொன்னாடை அணிவிக்க நினைவுப்பரிசை திரு.ஜியாவுதீன் வழங்கினார். திருமதி. சித்ரா ப்ராஸ்பர் அவர்களுக்கு திருமதி.ஷோபா கணேசன் பொன்னாடை அணிவிக்க நினைவுப்பரிசை திரு.தஞ்சாவூரான் வழங்கினார். வரவேற்புரை நிகழ்த்திய திருமதி.ஸ்வேதா கோபால் அவர்களுக்கு பொன்னாடையை திருமதி.பொற்செல்வி கண்ணன் அவர்கள் அணிவிக்க நினைவுப்பரிசை திருமதி.ஜெயா பழனி வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய திருமதி.நர்கீஸ் பானு அவர்களுக்கு திருமதி.மீனா குமாரி பத்மநாதன் பொன்னாடை அணிவித்தார். திரு. காவிரிமைந்தன் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்.

தொகுப்புரையாற்றிய திருமதி. பொற்செல்வி கண்ணன் அவர்களுக்கு திருமதி. ஸ்வேதா பொன்னாடை அணிவிக்க நினைவுப்பரிசை திரு.பத்மநாதன் வழங்கினார்.

கவியரங்கத் தலைமை ஏற்ற திருமதி. மீனா குமாரி பத்மநாதன் அவர்களுக்கு பொன்னாடை திருமதி.ஜெயா பழனி அணிவிக்க நினைவுப்பரிசை திருமதி. பொற்செல்வி கண்ணன் அவர்களால் வழங்கப்பட்டது.

நிகழ்வின் முக்கியக் கட்டமாய் சிறப்பிதழ்கள் வெளியீடு தொடங்கியது. சிறப்பு விருந்தினர்களை கெளரவிக்கும் சம்பிரதாயத்தைத் தொடர்ந்து சபையைத் தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தார் திருமதி.நர்கீஸ் பானு. அவர் தலைமையுரையில்! வானலை வளர்தமிழின் வரலாற்றை ரத்தினச் சுருக்கமாய் எடுத்துரைத்து இதன் வளர்ச்சியில் தானும் ஆதிமுதல் பங்கேற்று வருவதையும்.. முதல் பெண்ணாய் இந்த அமைப்பில் அடியெடுத்து வைத்ததையும் உவகை பொங்கக் குறிப்பிட்டார். எத்தனையோ வகையில் இந்த அமைப்பில் கவியரங்கத் தலைமை, வரவேற்புரை, தொகுப்புரை என்றெல்லாம் வழங்கியிருக்கிறேன்.. இன்று முதல் முறையாக.. தலைமையேற்று நடைபெறும் மகளிர்தின சிறப்பு விழா என்பது தனக்குக் கிடைத்த கெளரவம் மறக்க முடியாதது! மனம் நெகிழ்கிறது என்றார்!

பட்டிமன்றப் பேச்சாளர் சித்ரா ப்ராஸ்பர் பெண்ணுக்கு இருக்க வேண்டிய இலட்சிய வேட்கை பற்றி தன் தந்தையார் அதற்கான அடித்தளமிட்டுத் தந்ததையும் அதன் தொடர்ச்சியாய் தன் கணவர் திகழ்வதையும் பெருமை பொங்கக் குறிப்பிட்டார். உயிர், ஓவியம் என்கிற இரண்டு தலைப்புகளையும் ஒன்றிணைத்து தன் மகனுக்காக அவர் வரைந்த கவிதையினை சபையில் வழங்கி நெகிழச் செய்தார்.

உயிர் மற்றும் ஓவியம் ஆகிய தமிழ்த்தேரின் 77 மற்றும் 78வது சிறப்பிதழ்கள் வெளியிடப்பட்டன. தமிழ்த்தேரின் 77வது சிறப்பிதழான உயிர் - முதல் இதழை திருமதி. ஷோபா கணேசன் வெளியிட திரு.இப்ராஹிம் பெற்றுக் கொண்டார். இரண்டாம் இதழை திருமதி. ஸ்ரீதேவி சிங்கார வேலன் வெளியிட திரு.ஷர்புதீன் பெற்றுக் கொண்டார். மூன்றாம் இதழை திருமதி. சித்ரா ப்ராஸ்பர் வெளியிட திரு. பத்மநாதன் பெற்றுக் கொண்டார்.

78வது சிறப்பிதழான ஓவியம் - முதல் இதழை திரு. ஆதிபழனி வெளியிட திரு. கண்ணன் பெற்றுக் கொண்டார். இரண்டாம் இதழை திரு. இளையசாகுல் வெளியிட திரு.கோபால் பெற்றுக் கொண்டார். மூன்றாம் இதழை திரு.ஹெல்த் கணேசன் வெளியிட திரு.செம்மலை பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மோனோ ஆக்டிங் எனப்படும் தனி நடிப்புத்திறன் காட்டி அனைவரையும் தன்வசப்படுத்தினார் திருமதி. ஸ்ரீதேவி சிங்கார வேலன்! இவர் காட்டிய பாத்திரங்கள் மனதில் பதிய.. நகைச்சுவையும் - அவற்றை எந்த சுணக்கமுமின்றி எடுத்துரைத்த பாங்கும் இவரின் திறமையை சபையறியச் செய்தது! மேலும் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றையும் தவறாமல் சுட்டிக்காட்டி, நீங்கள் எல்லாம் நன்றாக இந்த அமீரக மண்ணில் வாழுங்கள்.. என்றாலும் தாயகத்தை மறவாமல் அவ்வப்போது வாருங்கள் என்று அன்பொழுக ஒரு தாயின் குரலாய் நிறைவுசெய்தமை .. எந்த ஒரு நிகழ்விலும் ஒரு செய்தி இருக்க வேண்டும் என்கிற அவசியத்தை வலியுறுத்தியது.

இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த மகளிர் அனைவரும் தத்தம் பங்களிப்பை ஒரு சிறிதும் குறையின்றி .. இதற்கான முன்னேற்பாடுளை.. தயாரிப்புகளை கவனமுடன் செய்திருந்தனர் என்பதாய் குறிப்பிடலாம் - கவியரங்கத் தலைவரைத் தவிர.. ஏனெனில்.. அவருக்கு தயாரிப்பு தேவைப்படவில்லை!

இவர்கள் அனைவரின் பங்களிப்பையும் நன்றியுரையில் தவறாமல் குறிப்பிட்டு அழகிய வரவேற்புரையில் தொடங்கிய நிகழ்வின் நிறைவுப் பகுதியைத் தன் இனிய தமிழ்நடையில் பாராட்டி மகிழ்ந்தார் திருமதி. ஜெயாபழனி அவர்கள்! கவித்துவ மணம் கமழ காற்றலையில் தென்றல் வர மிதந்திருந்த அரங்கத்தை மகளிர் அலங்கரித்த விழா - நெஞ்சுக்குள் பெய்த மாமழை என்பதில் மிகையேதுமில்லை!!

நிகழ்வில் பங்கேற்ற மகளிர் அனைவருக்கும் மலர்கொத்து வழங்கி கெளரவித்தார் அமைப்பின் மூத்த உறுப்பினர் கவிஞர் யமுனாலிங்கம் அவர்கள். வாழ்த்துரை வழங்கினார் முத்துப்பேட்டை ஷர்புதீன் அவர்கள்.

விழாவிற்கான சிறப்பு அணுசரனையை திரு,கோவிந்தராஜ் அவர்களும், கவிஞர் காவிரிமைந்தன் அவர்களுடன் கவிஞர் யமுனாலிங்கமும் செய்திருந்தனர்.

வழக்கம்போல் சிறப்புடனே இதழ்கள் வடிவமைப்பில் உயிரோட்டம் தந்த பதிப்பாசிரியர் ஜியாவுதீன் உயிர் மற்றும் ஓவியம் ஆகிய இதழ்களைச் சமர்ப்பித்தார்! அடுத்த மாதத் தலைப்புகள் ‘கல்வி' மற்றும் ‘புகழ்' என்றும் தெரிவித்தார்.

கவிஞர் காவிரிமைந்தன், கவிஞர் யமுனாலிங்கம், கவிஞர் ஜியாவுத்தீன், கவிஞர் தஞ்சாவூரான் மற்றும் கவிஞர் ஆதிபழனி ஆகியோர் விழா ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+