குவைத்தில் தமிழர்கள் பங்கேற்ற பெருநாள் சிறப்பு தொழுகை
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாட்டின் மூலம் குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை மற்றும் குடும்பங்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவ்வருடமும் (1434 / 2013) கடந்த 08.08.2013 அன்று (ஹிஜ்ரீ 1434 ஷவ்வால் பிறை 1) காலை 7:30 மணிக்கு குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் நடைபெற்றன.
அதிகாலை 5:30 மணிக்கே மக்கள் வரத் தொடங்கினர். வருகை தந்த பெருமக்களை நறுமணம் பூசி, பேரீத்தம் பழம் அளித்து சங்கத்தின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், களப்பணியாளர்களும் வரவேற்றனர். ஆலிம் பெருமக்கள் தக்பீர் சொல்ல, தொழுகைக்கு வந்தவர்களும் தொடர்ந்து தக்பீர் முழக்கம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். அப்பகுதியே தமிழ் இஸ்லாமிய மக்களின் வருகையால் விழாக்கோலம் பூண்டிருந்தது.
சரியாக காலை 6:30 மணிக்கு தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர் தமிழகத்தின் மூத்த ஆலிம் பெருந்தகை மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் ஆன்மீக அறிவொளி அ. முஹம்மது ஷப்பீர் அலீ ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் (நிறுவனர் மற்றும் முதல்வர், ஜாமிஆ மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரி, சென்னை) அவர்கள் "பார்வைகள் பத்து! ரமலானின் முத்து!!" என்ற தலைப்பில், ஒவ்வொரு இஸ்லாமியரிடமும் இருக்க வேண்டிய பண்புகள், பிற மக்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், பெருநாள் அன்று எடுக்க வேண்டிய உறுதிமொழிகள் போன்றவற்றை தெளிவான முறையில் அழகு தமிழில் எளிய நடையில் சிந்திக்க வைக்கும் அற்புதமான சொற்பொழிவை நிகழ்த்தினார்கள்.
சிறப்புச் சொற்பொழிவைத் தொடர்ந்து சரியாக காலை 7:15 மணிக்கு சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள் சங்கத்தின் செயற்திட்டங்கள், பெருநாள் தொழுகை முறை, புத்தாடை அணியும் போது ஓதும் துஆ மற்றும் வாழ்த்துக்கள் கூறும் முறை போன்றவற்றை விளக்கமாக எடுத்துரைத்து பெருநாள் தொழுகையை நடத்தி வைத்தார்.
தொழுகையைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., அவர்கள் "பெருநாள் ஃகுத்பாப் பேருரை" நிகழ்த்தினார். அவர் தனது உரையில், "ரமலானில் மேற்கொண்ட பயிற்சிகள் காலமெல்லாம் நிலைத்திருக்க வேண்டும், நோன்பினால் இறையச்சம் (தக்வா) ஏற்பட்டதா? என்பதை ஒவ்வொருவரும் சுய பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகள் யாவும் உருக்கமான பிரார்த்தனைக்குப்(துஆ) பிறகு இனிதே நிறைவுற்றன. துஆ ஓதப்பட்டவுடன் வந்திருந்த பெருமக்கள் ஒருவருக்கொருவர் தங்களின் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும், இஸ்லாமிய சகோதரர்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். K-Tic சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தச் சிறப்பு தொழுகை குறித்தும் மக்கள் மன நிறைவுடன் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர்.
பெண்களுக்கு தனியிட வசதியுடன் தொழுகைக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் சங்க நிர்வாகிகள். பெண்கள், குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 2, 500க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
பள்ளிவாசலின் உள் பகுதி, வெளிப்பகுதி, மற்றும் பள்ளிவாசலுக்கு வெளியேயும் மக்கள் தொழுகைக்காக அணிவகுத்து நின்றனர். நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் பெருநாள் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டியும், குளிர்பானங்களும், தேநீரும் மற்றும் சங்கத்தின் 8ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு மலர்களும் இலவசமாக வழங்கப்பட்டன.