நினைவுகள் சுகமானவை….

சந்தித்த நொடிப்பொழுதில் சட்டென்று வந்து ஒட்டிக்கொள்வதுதான் காதல். விழியில் விழுந்து இதயம் நுழைந்தது காதல் என்பார்கள். அந்த விழிகள் சந்திக்க ஏதோ ஒன்று காரணமாக இருந்திருக்க வேண்டுமே?.
நமக்குரியவர்களை நாம் சந்திக்க வேண்டும் அதற்கான நேரத்தை இயற்கைதான் ஏற்படுத்திக்கொடுக்கிறது. ஏதோ ஒரு மழைநாளில்... ஒரு பேருந்து நிறுத்தத்தில்... திருமண மண்டபத்தில் என எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
நமக்குரியவரை நாம் சந்தித்த உடனே மனசுக்குள் மணியடிக்குள்... மூளைக்குள் பல்பு எரியும் என்றெல்லாம் சொல்வார்களே... ஏன் ஜெமினி மேம்பாலத்தில் கூட லட்சம் பட்டாம்பூச்சிகள் பறக்குமாம்.
இந்த காதல் வந்தால் என்னென்னவோ நிகழ்கிறது.
கல்லாய் இருந்த நான்
சிற்பமாகிப்போனேன்...
அமாவாசையன்று கூட நிலவு தெரிந்தது
ஜன்னலில் உன் முகம்...
என்று பேச்சும் மூச்சும் கூட கவிதையாகிப் போகிறது.
சிலருக்கு இரண்டு பக்கமும் சிக்னல் ஓகேயாகிவிடும். சிலருக்கு ஒருபக்கம் மட்டுமே பச்சை சிக்னலும் ஒரு பக்கம் சிகப்பு சிக்னலும் விழுந்திருக்கும். அப்போது நினைவுகள் மட்டுமே சுகமென வாழ்ந்துவிடுவார்கள் சில காதலர்கள்.
காதல் வந்தால் சொல்லியனுப்பு...
உயிரோடிருந்தால் வருகிறேன்...
என்று காதலியை நினைத்து ஏங்குபவர்களும் இருக்கதான் செய்கின்றனர்.
இருவருமே காதலித்து சந்தர்ப்ப சூழ்நிலையால் கைகூடாமல் போன காதல்களும் உள்ளது.
காதலிக்கும் போது பறிமாறிய கடிதங்கள்... பரிசுப்பொருட்கள்... பேச்சுக்கள்... சென்ற இடங்கள்... முத்தங்கள் என ஒவ்வொன்றும் நினைவுச்சின்னங்களாக நிறைந்திருக்கும்.
இன்றைக்கும் மெயில் ஐடியின் பாஸ்வேர்ட், குழந்தையின் பெயர் என ஏதாவது ஒன்றில் காதலி அல்லது காதலனின் பெயரை வைத்து அழகு பார்க்கும் காதலர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஒரு மழைநாளில் நாம் சந்தித்தோம்...
ஒவ்வொரு முறை மழை வரும் போதும்
அதில் உன் முகம்தான் தெரிகிறது...
வடகிழக்குப் பருவமழையோ...
தென்மேற்குப் பருவமழையோ...
எதுவென்றாலும்
பெயர்தான் மாறுமே தவிர
மழையின் நிறம் மாறாது...
அதுபோலத்தான்
நம் காதலும்
நாம் இடம்மாறிப் போயிருக்கலாம்...
நம் நேசம் ஒன்றுதான்...
நம் நினைவுகளை விட்டு
நீங்காது நிறைந்திருக்கும்!
இதுதான் காதலின் சக்தி... இந்த நினைவுதான் பொக்கிஷங்களாய் ஒவ்வொரு காதலர்களுக்குள்ளும் நிறைந்திருக்கும்.












Click it and Unblock the Notifications