தொல்காப்பியம் தொடர்பொழிவு.. பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ உரை!
புதுச்சேரி: புதுச்சேரி உலகத் தொல்காப்பிய மன்றம் சார்பில் 29.04.2017 (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு புதுச்சேரி, செகா கலைக்கூடத்தில் தொல்காப்பியம் குறித்த சிறப்புப் பொழிவு நடைபெற்றது.
பிரான்சு நாட்டில் வாழும் பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியலும் உடல்மொழிக் கூறுகளும் என்ற தலைப்பில் இவரின் சிறப்புரை அமைந்தது. தொல்காப்பியர் உடல்மொழிக் கூறுகளை நுட்பமாகக் கவனித்து இலக்கணம் வரைந்துள்ளமையை இவரின் உரையில் குறிப்பிட்டார்.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் அமைந்துள்ள மெய்ப்பாட்டியல் குறித்தும், உடல்மொழிக்கூறுகள் குறித்தும் இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி இவர் பேசினார். பேராசிரியர் ம. இலெனின் தங்கப்பா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முனைவர் ப. பத்மநாபன் வரவேற்புரை நிகழ்த்தினார். வில்லிசை வேந்தர் இ. பட்டாபிராமன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். முனைவர் மு.இளங்கோவன் அறிமுகவுரையாற்றினார்.

பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டித் தமிழ்ப்பணிச் செம்மல் என்ற விருதினை பாவலர் சு. சண்முகசுந்தரம் வழங்கிப் பாராட்டினார். முனைவர் இரா. கோவலன் நன்றியுரை வழங்கினார். புலவர் சீனு. இராமச்சந்திரன், தூ. சடகோபன், வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் க. தமிழமல்லன், தமிழியக்கன், க. நாராயணன், அ.இராமதாஸ், பாவலர் துரை. மாலிறையன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் திரளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications