துபாயில் நடந்த ஈமான் அமைப்பின் செயற்குழு கூட்டம்
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் 7.10.2014 அன்று மாலை அஸ்கான் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
துவக்கமாக ஜமாஅத் ஒருங்கிணைப்பு நிர்வாகி கூத்தாநல்லூர் ஹிதாயத்துல்லா இறைவசனங்களை ஓதினார். கூட்டத்திற்கு ஈமான் அமைப்பின் துணைத் தலைவரும், அரேபியா ஹோல்டிங்ஸ் மேலாண்மை இயக்குநருமான அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார்.
அவர் தனது தலைமையுரையில் ஈமான் அமைப்பின் செயல்பாடுகளுக்கு முக்கியக் காரணமாக இருந்து வரும் அனைத்து நிர்வாகிகளையும் பாராட்டினார். பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். துணைப் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா துவக்கவுரை நிகழ்த்தினார்.
ஈமான் அமைப்பின் சார்பில் 31.10.2014 வெள்ளிக்கிழமை சோனாப்பூர் பவர் செக்யூரிட்டி கேம்பில் நடைபெற இருக்கும் ரத்ததான முகாம், எமிரேட்ஸ் என்விரான்மென்டல் சொசைட்டியின் பெப்ஸி உள்ளிட்ட அலுமினிய கேன் சேகரிப்பு பணியில் ஈடுபடுவது, அமீரக தேசிய தின விழாவினை சிறப்புற கொண்டாடுவது, இலவச மருத்துவ முகாம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக அல்ஹாஜ் இத்ரீஸ் மரைக்காயர் அவர்கள் பங்கேற்று ஈமான் அமைப்பின் சேவைகள் சிறப்புற வாழ்த்து தெரிவித்தார். மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்
காயல் ஈஸா துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சியில் விழாக்குழு செயலாளர் கீழை ஹமீது யாசின், அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், தகவல் தொடர்பு பொறுப்பாளர் கும்பகோணம் சாதிக், செயற்குழு உறுப்பினர்கள் யாகூப், ஈசா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.