மகாகவி பாரதிக்கு கவிஞர் பழனிபாரதியின் கவிதாஞ்சலி!
இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு தனது கவிதையால் அஞ்சலி செலுத்தியிருக்கிறார் கவிஞரும் பாடலாசிரியருமான பழனிபாரதி.
ஆனந்த விகடன் பத்திரிகையில் 'வதுவை நன்மணம்' என்ற தலைப்பில் வெளியான பழனிபாரதியின் கவிதையை, குரு கல்யாண் இசையில் பாடலாக இன்று வெளியிட்டு அந்த மகாகவிக்கு தனது மரியாதையைச் செய்துள்ளார் பழனிபாரதி.
இதுகுறித்து கவிஞர் பழனிபாரதி கூறுகையில், "ஆனந்த விகடனி'ல் வெளியான எனது 'வதுவை நன்மணம்' என்ற கவிதைக்கு இசையமைப்பாளர் குரு கல்யாண் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார். அந்தப் பாடலைக் காணொளிக் காட்சியாக அவரது 'குரு கல்யாண் மியூசிக்' நிறுவனம் இணையதளத்தில் வெளியிடத் திட்டமிட்டது.
அதை வெளியிட ஒரு சிறந்த நாளைச் சொல்லுங்கள் என்றார் குரு.
கவிதைக்கு எல்லா நாளும் நல்ல நாள்தான்...ஆனாலும் ''சுவை புதிது, பொருள் புதிது,வளம் புதிது, சொற் புதிது, சோதி மிக்க நவகவிதை'' நாயகன் பாரதியின் பிறந்த நாள் கவிதையின் திருநாளில்லையா... ஆகவே பெண்ணையும் மண்ணையும் பெருமை செய்யும் 'வதுவை நன்மணம்' இசைக் கவிதை இந்த நாளில் (11.12.2016) வெளியிட்டுள்ளனர்.
'துன்பம் தீர்வது பெண்மையினாலடா' என்றான் பாரதி. அந்தப் பெண்மையைக் காப்பது பெரும் போராட்டமாகி இருக்கிறது இன்று....
'வதுவை நன்மணம்' என்னும் இந்தக் கவிதையின் கடைசி வரிகள் இப்படி முடிகிறது...
'மரபணு மாற்றப்படும் உலகினில்
அன்பே
உன்னை
எங்கே அழைத்துச் செல்வது பத்திரமாக?" - என்றார் பழனிபாரதி.
பாடலின் வீடியோ: