வெளிச்சம் தந்த வெள்ளை நிலா.. ஆசிரியைக்கு ஒரு மாணவரின் கவிதைப் புகழஞ்சலி!
சென்னை: அபுதாபியிலிருந்து நமது வாசகர் சிவமணி நமக்கு அனுப்பியுள்ள ஆசிரியர் தின பதிவு:
ஆசிரியர் அவர்களுக்கு,
எனது பள்ளி ஆசிரியை திருமதி. லலிதா. திருச்சி மேலக் கல்கண்டார் கோட்டையில், தூய மரியன்னை நடுநிலைப் பள்ளி ஆசிரியை.
என்னைப் பிள்ளை போல பாவித்து, தினமும் அவர் வீட்டில் இருந்து தான் செல்வேன் பள்ளிக்கு அவர் விரல் பிடித்து. என்னை செதுக்கிய சிற்பியை 20 வருடங்களுக்கு முன்பு நேரில் சென்று சந்தித்தேன்.
என்னை ஏற்றி விட்ட அந்த ஏணிக்கு எதனை கொண்டு நன்றி கடனை செலுத்துவேன்.
இதோ அவருக்காக ஒரு கவிதை:
என் பெயரை உச்சரித்து
என் இதயத்தை விரட்டி இடம் பிடித்த
முதல் நாயகி
அவள் சொல் மீறாது
பாராட்டை பெற்றிடவே
புத்தகத்தில் புதைந்தேன்
என்னால் எல்லாம் முடியுமென்பதை
என் மூளையில்
முடிச்சு போட்ட முத்தழகி
மந்த புத்தியில்
வெள்ளையடித்து வெளிச்சம் தந்திட்ட
வெள்ளி நிலா
உயிரும் மெய்யும் கற்பித்து
ஆசிரியை வடிவில் வந்திட்ட
நவீன சரஸ்வதியே என் முதல் ஆசான்
திருச்சி தூய வளனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, திரு அடைக்கலம், திரு. அற்புதராஜ், திரு. ஜேம்ஸ் மற்றும் திரு. ராஜா சார் போன்ற மேதைகளின் அறிவுரையில், வழிகாட்டலில் முளைத்திட்ட பூ நான்.
7 வருடங்களில் படிப்பு, பண்பு, ஒழுக்கம் என எங்கு எல்லாம், எப்படி எல்லாம் அவர்களால் எங்களை சீர்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் எங்களை வழி நடத்திய தாயுமானவர்கள். இன்றும் இன்னும் அனுபவங்கள் வர வர அவர்கள் மீதான மதிப்பு இன்னும் கூடி கொண்டே செல்கிறது. இதோ அவர்களுக்காக ஒரு கவிதை:
தினமும் ஆசி கொடுக்கும்
அதிசயப் பிறவி ஆசிரியர்
அடுப்பு எரியா விட்டாலும்
அறிவூட்டும் களஞ்சியம்
பணம் பற்றாக்குறையிலும்
படிப்பு தரும் அமுதம்
விடியலில்லா வீட்டிலும்
விடியல் தரும் சூரியன்
ஏடு எடுக்கா கைகளிலும்
படிப்பு வாசம் தரும் நந்தவனம்
தாயின் அருமைக்கு பிறகு
ஆசிரியரின் அருகாமையே
அரவணைக்கும் ஆலயம்
அடித்து விட்டு பெற்றோர் முன்
நல்லாவே படிக்கிறான் எனும்
நேரம் எங்களைக் காக்கும்
காவல் தெய்வம்
கரம் பிடித்து கரைச் சேர்க்க
எழுத்தோடு என்னையும்
திருத்திய புத்தகம்
சமூக சீர்திருத்தும் பணியில்
தன்னை உருக்கி மாணவனைத்
தங்கமாக்கும் அதிசயம்
படித்தவனும் படிக்காதவனும்
சொல்லும் ஒரே மந்திரம் - அந்த
வாத்தியார் இல்லா விட்டால்
நான் இல்லை என்பதே