அமெரிக்காவில் தங்கத்தமிழ் புத்தகம் வெளியீட்டு விழா
அமெரிக்காவில் தங்கத்தமிழ் புத்தகம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தங்கத்தமிழ் என்ற புத்தகம் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
அமெரிக்காவின், டெக்சாஸ் மாநிலம், டல்லாஸ் மாநகரில் ஜூலை 1, .2018 இல் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ் விழாவில்
பாவலர் அறிவுமதி எழுத்திலும், ஓவியர் மருது தூரிகையிலும் உருவான "தங்கத்தமிழ்" புத்தகத்தை தமிழ் ஆர்வலர், புரவலர் பால்பாண்டியன் வெளியிட கலியபூர்த்தி ஐ.பி.எஸ், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், மருத்துவர் ஆறுமுகம், மருத்துவர் வேணுபிரபாகர், இலக்குமன் தமிழ், சௌந்தர் ஜெயபால் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

சங்கத்தமிழில் இருந்து கிட்டத்தட்ட 50 பாடல்களை தேர்ந்து எடுத்து அதற்கு பாவலர் அறிவுமதி அவர்கள் தனக்கே உரிய எளிய முறையில் தமிழுரையும், ஓவியர் மருது அவர்கள் தனது தூரிகையின் மூலம் சித்திரங்களாக எழிலுரையும் வழங்கியிருக்கிறார்கள்.
இவ்விழாவில் அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நூலின் இடம் பெற்றிருக்கும் முதல் பாடலும், அதற்கான தமிழுரையும், எழிலுரையும்...
பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரைப்
புன் கால் நாவல் பொதிப் புற இருங்கனி
கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்துப்
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்

- அம்மூவனார், நற்றிணை - 35
பொங்கியெழும் அலைகளால் ஓயாமல்
மெழுகிவிடப்படுகிற ஈரக் கடற்கரை.
கருநாவல் பழமொன்று சிறிய காம்புடன்
அதில் பொத்தென விழுகிறது.

அங்கே பறந்துகொண்டிருந்த வண்டுகள்
அதனைப் பார்த்ததும்...
தம் இனத்தைச் சேர்ந்த ஒரு வண்டுதான்
சிறகு கிழிந்து விழுந்து விட்டதாகக் கருதிப்
பதைபதைப்போடு அதனை நோக்கி விரைகின்றன.
அதே நாவல் பழத்தை
நாவல் பழமாகவே உணர்ந்த நண்டு ஒன்று
தனக்குக் கிடைத்த இனிய உணவாகக் கருதி
ஓடிப்போய்த் தன் பல்சிறு கால்களால் கௌவியதுதான்

தாமதம்...
"கொடுமைக்காரா! கொடுமைக்காரா! யாரடா நீ?
எம் இனத்து வண்டை வந்து இப்படி
வன்முறை செய்கிறாயே. விடுடா! விடுடா!"
காப்பாற்றி மீட்பதற்கான
போராட்ட முயற்சியாய்
அந்த வண்டுகள் குமுறி
நண்டினைத் தாக்கத் துணிகின்றன.

அதே நேரத்தில் அவ்வழியே...
இரை தேடும் நாரை ஒன்று விசுக்கெனப் பறந்துவர...
பயந்துபோன நண்டு... பழத்தை விட்டுவிட்டு ஓடிப்போய்
வளைக்குள் ஒளிகிறது.
பிறகுதான் அந்த வண்டுகள்...
"அப்பாடா... நம் இனத்து
வண்டிற்கு ஏற்படவிருந்த கொடுமையிலிருந்து
அதனைக் காப்பாற்றிவிட்டோம்" என்று அமைதியாயின்
தம் இனமல்லாத ஒரு நாவல் பழத்தைத் தொட்ட
நண்டினையே தம் இனத்தைத்
தாக்க வந்ததாய்ப் பிழையாக உணர்ந்த வண்டுகள்
இன ஒற்றுமையோடும்
மான உணர்வோடும் தாக்கத் துணிந்தன.
ஆனால்..
தம் இனமே அழிக்கப்படுவதைப் பார்த்தும்..
ம்...












Click it and Unblock the Notifications