நேற்று நாங்களும் நாளைய நிலவுகளும்...!
காலை
கடலும் கதிரவனும்
பனித்துளி படர்ந்த புல்வெளியும்...
உப்புக்காற்றும் ஊர்குயிலும்
இசைபாடும் காலை...!
ஆழக்கடலும் அங்கிருந்து
துயில்கலையும் கதிரவனும்
ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்
அருகினில் சென்று பாராமல்
அப்போது...
காலைவிடியாது எனக்கு...!
தூரத்தில்...
கட்டுமரத்தை தரையிறக்கி
அள்ளிவந்த மீனையெல்லாம்
அன்னையிடம் கொடுத்துவிட்டு
அண்ணார்ந்து பார்த்துக்கொண்டே
"அப்பாட" என்று சொல்லி
உப்பு நீரும் முத்துவியர்வையும்
வடிந்த முகத்தை
தோளிலிருந்த
துண்டால் துடைத்துவிட்டு
என்னைக்கண்டு
கையசைத்துக்கொண்டே
கூப்பிடுவான் என் பள்ளித்தோழன்..!
இதுவரை...
"குருவிநேவி" அடிக்க
முள்ளில்பாய்ந்து
ஒருதடவை
"கிபிர்" விமானம் வட்டமிட
வடலிக்குள் விழுந்து
ஒரு தடவை
ஆனையிறவிலிருந்து
"செல்" அடிக்க
வேலியைக் கடந்து
ஒருதடவையென
மூன்று தடவைகள்
பழுதாய்ப் போன
இரண்டுவாரங்களுக்குமுன்
வாங்கிய - என்
புது மிதிவண்டியில்
நானும் அவனும் பள்ளிசெல்வோம்...!
வெள்ளைச் சீருடையில்
சின்னச் சின்ன நிலவுகள்
வீதியெங்கும் மெதுவாகநகர
வேகமாக நாங்கள்
முந்தியடித்துக்கொண்டு போவோம்..!
ஆசிரியர் பாடம் நடத்த
பயங்கர இரைச்சலுடன்
பயம்காட்ட "கிபிர்" வரும்
வானத்தில் வட்டமிட
வளமைபோல..
திட்டமிட்ட பாடங்கள்
பாதியில் நின்றுபோகும்..!
அன்றும் அப்படித்தான்...
பயங்கர இரச்சலுடன்
அது வந்தது...!
நாங்கள் பயந்தோடி
உயிர்காக்க
வெளியேறி வேலிபாய்ந்தோம்
அல்லதுபோனால்...
அன்றுவந்த
அந்திவானமாய்
வெள்ளைச் சீருடைநிலவுகள்
சிவந்திருக்கும்
கனவுகள் சிதைந்தபடி
வாழ்வும் முடிந்திருக்கும்...!