வயதுக்குவரும்முன் காதலித்தேன்
சரியாக
முப்பது ஆண்டுகள்
பிரிந்த நினைவுகள்
நெருப்புக் கொப்புளங்களாய்
மூழ்க மூழ்க
மூச்சுத்திணறல்
ஏன் சந்தித்தோம்
ஏன் பிரிந்தோம்
ஏன் வருந்துகிறோம்
எந்தப் பந்தமும்
இல்லாமல்
எப்படி நாம்
பாதிக்கப்பட்டோம்
எப்படி நமக்குள்
பந்தம் வந்தது
உனக்குத்தெரியுமா
அதிகாலைக்காக
உறக்கத்தைக் குறைத்தேன்
உறக்கத்திலும்
உன்னையே அடைகாத்தேன்
மெளன இருட்டில்
பூனைபோல் நடந்து
உன்
தரிசனத்திற்காகத் தவித்தேன்
இரத்தச்சிவப்பில்
உன்
அடிமடி அசையாதா
என
இலையிருட்டில்
விழிப்பாவையை
உருட்டி உருட்டி
வருத்தினேன்
சில நேரங்களில்
உன் நடையில் தடுமாறி
மனமும் நானும்
களைத்துவிழுந்தோம்
எங்கே சாப்பிடுகிறாய்
என்ன சாப்பிடுகிறாய்
என்பதெல்லாம் எங்களுக்குள்
ஒரு கற்பனைக்காவியம்
எங்கிருந்து வந்தாய்
என்பதில்கூட
இன்னும் நீள்கிறது சர்ச்சை
உன்னைத்தான் நான்
வயதுக்கு வரும்முன் காதலித்தேன்
வயது முதிர்ந்தும்
காதலித்துக்கொண்டிருக்கிறேன்
காதலி
காதல்
ஒருசிலரைப்போல
நம்மிடத்தில்தான்
தோல்வியே இல்லாமல் தொடர்கிறது
வண்ணக்கைதியாய்
வரித்துக்கொண்டதில்
வியப்பில்லை
மாரழகில்
மயங்கிய நொடிகளில்
அன்னாந்து அன்னாந்து
கழுத்து வலியால் கர்வப்பட்டிருக்கிறேன்
அழகின் முழுமையை
அடையும் நோக்கில்
அத்துமீறிய குற்றத்திற்காக
காதல் கைதிநான்
ஆயுளின் அந்தநொடிவரை
காதல்தாகம்
இளமையாய் என்னுடன்
ஒரு காதல்கைதி
ஆயுள் கைதியானதில்தான்
நான் விடுதலையானேன்












Click it and Unblock the Notifications