மனம்
Subscribe to Oneindia Tamil
நகரப் பேருந்துகளின்
நடத்துனர்களின் மீது
அதிருப்தியாய் இருக்கிறேன் நான்.
தரவேண்டிய பத்துபைசாவை
தருவதேயில்லை.
தருவதற்கில்லை என்றும்
சொல்வதில்லை.
ஏறுவதற்குள் விசிலடித்து
எத்தனையோ பயணிகளை
குப்புறக் கவிழ்த்திருக்கிறார்கள்
அவர்கள்.
போட்டி போட்டுக் கொண்டு
போகிறார்கள் காலியாக.
நிறுத்தங்களில் நிறுத்தாமல்
நிற்பவர்களின் வலியறியாமல்.
எல்லாவற்றுக்கும் மேலாக
எச்சிலைத் தொட்டுத் தொட்டு
பொட்டு வைத்து
பயணச் சீட்டுகளை
பரிமாறுகிறார்கள்.
இப்படியாக
நடத்துனர்களுக்கெதிரான
கற்களைத் தேடித் தேடி
கண்டெடுத்து வந்து
மீண்டும் மீண்டும்
கல்லறை கட்டுகிறேன் நான்.
ஆயினும்
ஒவ்வொரு முறையும்
அதை உடைத்து
உயிர்த்தெழுந்து நிற்கிறது
5E நடத்துனரிடம்
அதிகப்படியாக நான் பெற்று வந்துவிட்ட
ஐந்து ரூபாய்.












Click it and Unblock the Notifications