பொங்கலே, போய்வா!
பொங்கலெனும் பண்டிகையே! தமிழோர் நெஞ்சம்
புளகமுறத் துய்த்துணரும் புனித நாளே!
எங்குவந்தாய்? இவ்விடம்நீ எதற்கு வந்தாய்?
எம்மவர்க்கு என்னபொருள் கொண்டு வந்தாய்?
கண்களில்நீர் கடலாகப் பொங்கும் போது
கவலையினால் உள்ளமெலாம் பொங்கும் போது
பொங்கலென்று நீயும்வந்து பொங்கு வாயோ?
புண்பட்டோர் வலியையும்நீ தாங்கு வாயோ?
வந்துவிட்ட பொங்கலைநான் மாலை யிட்டு,
வரவேற்று வாழ்த்திடத்தான் மனம் என்றாலும்
சொந்தமெலாம் நொந்தபடி சோர்ந்தி ருக்க -
தோன்றிடுமோ கொண்டாட்டம் மீ(து)ஓர் நாட்டம்?
பொங்கிவந்த ஆழியலை அடங்கி னாலும்
பொல்லாத துயரலைகள் அடங்க வில்லை:
குங்குமத்து மங்கலத்தை இழந்த எங்கள்
குலமாதா; கண்கள்இன்னும் உறங்க வில்லை!
செங்கரும்புச் சாறுகொண்டு சோறு பொங்கச்
செந்தமிழர் சேனையிடம் கலங்கள் இல்லை:
சிங்கநிகர் தமிழினத்தின் பொங்கல் பாட்டைச்
செவிமடுக்கச் சிறுமழலைக் குலங்கள் இல்லை!
நெய்தல்நிலப் பட்டுமணல் நெடுகி லெங்கும்
நேற்றிருந்த உடைமைகளைக் காண வில்லை:
செய்தபிழை என்னவென்று இது வரைக்கும்
திரைகடலார் குடும்பங்கள் அறிய வில்லை!
வெங்களத்தில் "விழாதவர்கள் என்ப தாலே
விழாக்கண்ட எம்மவர்தம் நிலைகண் டாயோ?
எம்குலத்தோர் "விழுப்புண்கள் ஏற்ற தாலே
இடர்க்குழியில் யாம் விழுந்த விதிகண் டாயோ?
எப்படித்தான் சொல்லுவதோ எங்கள் துக்கம்?
எவரிடத்தில் கொட்டுவதோ எங்கள் ஏக்கம்?
இப்படியோர் சூழ்நிலையில் பொங்கலே, நீ
ஏதேனும் ஆறுதல்தான் தர வல்லாயோ?
தவிக்கின்ற தமிழ்நெஞ்சும் ஈழ மண்ணும்
தமைமறந்து மகிழஇது தருணம் அல்ல:
புவிக்கென்றும் புகழ்செய்யும் உன்னிடம் நான்
"போய்வா,நீ! என்பதல்லால் என்ன சொல்ல?
"பொங்கல்எனில் பொங்காதே! என்று கூடப்
பொருளுண்டு: அதனால்நீ கடலை நோக்கிப்
"பொங்கல்! எனப் புத்திமதி கூறி விட்டுப்
பூசலின்றிப் பேசாமல் போய்வா, போய்வா!!
- தொ. சூசைமிக்கேல்([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1. திருக்குறள்
2. ழகரம் பழகு!
3. ரமதான் வாழ்த்து!
4. எங்கள் வீட்டுப் பனைமரம்!
5. என்செய்வோம்! என்செய்வோம்!
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications