பணத்தாசை?
கண்ணிமைக்கும் நொடிக்குள்
அது நிகழ்ந்துவிட்டது...
எதிரே வந்த பேருந்து
என்மேல் மோத ...இதோ
பாதையோரத்தில் தூக்கி எறியப்பட்டேன் நான்...
கையில் இருக்கும்
ரூபாய் நோட்டுகளை
வறுமைப்பிடியென இறுகப்பிடித்து
சரிந்துகிடக்கும் என்னை
பார்த்தவர்..பார்ப்பவரிடம் சொல்லக்கூடும்
இறக்கும் நிலையிலும் பணத்தாசையோவென...
ஆத்தாவின் மருத்துவச்செலவு
தங்கையின் பட்டுப்புடவை
தம்பியின் மிதிவண்டி கனவுகளுக்கெல்லாம்
தவணைமுறையில் நீர்வார்ப்பதென்னவோ-- நான்
அவ்வப்போது அனுப்பும் சிறுதொகைதான்...
எதோவொரு அவசரத்தில்
பாதையை கடக்கும்போது
பார்த்து நடக்க தவறிவிட்டேன்...
இதோ நினைவு சங்கிலி
தொடர்பை துண்டித்து
தொலைதூரம்சென்று தொலைந்துகொண்டிருக்கிறது...
முகம் தேய்ந்து...முட்டிகள் பெயர்ந்து
இரத்தம் வழிந்தோட - நான்
இறந்துகொண்டிருப்பது வலியில்லை எனக்கு...
தபால்காரன் வரும் திசை நோக்கி
தவம்கிடந்து ஆத்தா படும்
அவதிகள் யாவும் மனதில் வந்துபோனதில்
வலிகள் தந்து போனதால்
நினைவு மறந்த நிலையிலும்
இரத்தத்திட்டுகள் மீது
துளித்துளியாய் கண்ணீர் துளிகள்...
எப்படியும் ஆத்தாவிற்கு
பணம் போய் சேரவேண்டுமென்கிற எண்ணத்தில்
பணத்தை இறுகப்பிடித்து
சரிந்துகிடக்கும் என்னை
பார்த்தவர்..பார்ப்பவரிடம் சொல்லக்கூடும்
இறக்கும் நிலையிலும் பணத்தாசையோவென...
- சாந்தி மனோகரன் ([email protected])












Click it and Unblock the Notifications