ரத்தம் குடிக்கும் வேர்கள்.. உருகித் தவிக்கும் சிரியா! #syria
Recommended Video
சென்னை: சிரியாவில் உயிர்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்படுகின்றன. பறிபோகும் உயிர்களின் ஓலம் உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. மனிதகுலத்தின் மகா மோசமான பக்கத்தை சிரியாவில் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து நமது வாசகர் தங்கமணி கணேசன் எழுதியுள்ள வேதனைக் கவிதை:
ரத்தம் குடிக்கும் வேர்கள்!
ஆழப் பரவியிருக்கும்
ஏகாதிபத்தியம் -தன்
வேர்களை இன்னும் இன்னும்
நீட்டிக்கொண்டே
இருக்கிறது
அதன் கிளைகளில்
முதலாளித்துவ
கழுகுகளுக்கு மட்டுமே
கூடு கட்ட அனுமதி
தரப்பட்டிருக்கிறது
அடித்தட்டுகளுக்கு
அதன் நிழல் சுடுகிறது
கண்டங்களைத் தாண்டி
கிளைக்கும் அந்த விருட்சம்
தினம் தினம்
நச்சுக் காற்றை
கக்கிக்கொண்டே
இருக்கிறது.
அதன் வேர்
இரத்தத்தை மட்டுமே
குடித்து வளர்கிறது
அதன்
கிளைகளில் வாழும்
முதலாளித்துவ கழுகுகள்
கொழுப்பதற்காகவே
கொத்துக் கொத்தாக
பிணங்கள் இங்கு
விழ வேண்டியிருக்கிறது.