என் முதல் கனவு!
- சுஜாதா ஜெயராமன்
ஒவ்வோர் மனத்திலும் ஆயிரம் கனவுகள்
"குறிக்கோளை கனவிலே காண்
வெற்றி நிச்சயம்" என்பது வாக்கு
நானும் என் குறிக்கோளை கனவிலே காண்கிறேன்
என் முதலும் முடிவுமான கனவு
என் ஆசை என் உணர்வு எல்லாமே
"பெண்ணை வன்புணர்வு செய்யா உலகம் வேண்டும்"

தினம் தினம் பத்திரிகையில் தொலைக்காட்சி பெட்டியில்
இன்று நடப்பில் உள்ள அத்தனை சமூக வலைத்தளங்களில்
எத்தனை எத்தனை பெண் வன்புணர்வு செய்திகள் !!
அய்யகோ
"பெண்களை நசுக்கி மிதிக்காத நாட்களே இருக்காதா"
என்று ஏங்குகிறது மனம் தினம் தினம்
பருவ பெண்கள் மட்டுமல்ல,
பச்சிளம் சிசுக்களையும் விட்டு வைக்காத
கொடிய மனது
அவர்களை பெற்றேடுத்தவளும் பெண்தானே
படிப்பது ராமாயணம்
இடிப்பது கோவில் என
கை எடுத்து கும்பிடும் அனைத்தும் பெண் தெய்வங்கள்
தெய்வமாக பெண்களை பூஜித்து விட்டு
அதே பெண்ணினங்களை வன்புணர்வால்
எப்படி புசிக்க தோன்றுகிறதோ!
கற்பனைக்கும் எட்டாத கொடிய வித்தியாசம் ஒரே மனதுக்குள் .
திருமணம் செய்து பின் பணம் கேட்டு கொடுமை செய்வது
கருவிலேயே பெண் சிசுவை கொன்று விடுவது
பிறந்த சிசுவானாலும் வளர்ந்து ருதுவானாலும்
எந்த வயது பெண்ணையும் வன்புணர்வு செய்வது
விருப்பமில்லா பெண்ணை
அமில தாக்குதல் செய்து அலங்கோலம் செய்வது
விலை மதிப்பில்லா சிறு பெண்களை கடத்தி
வியாபார பொருளை போல் விற்பனை செய்வது
ஐயோ ஐயோ
எண்ணிலடங்கா இன்னும் எத்தனை கொடுமைகள் !!
இத்தனையிலும் தப்பித்து பெண்ணொருத்தி
உயர்ந்து நின்றால் அவளுக்கு
தவறுதலான பட்டம் கட்டும்
தாழ்வு மனப்பான்மையுடன் ஒரு கூட்டம்
என்றைக்கு மாறும் இந்த நிலைமை
மாந்தர்களை நிம்மதியாய்
முழுமையாக வாழ வைக்கும்
அந்த இனிய உலகமே
என் முதல் கனவு
என் உயிர் மூச்சு
என் பிரார்த்தனை.












Click it and Unblock the Notifications