வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!
சென்னை: கல் தோன்றா முன் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்க்குடி என்று பெருமைக் கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு.
ஆங்கிலேயர்கள் மொழி வாரியாக நம் நாட்டைப் பிரித்த போது தமிழ் மொழியால் நம் மாநிலம் தமிழ்நாடானது. உலகப் பொதுமறையான திருக்குறள் தமிழ் மொழிக்குச் சிறப்பு. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவை உள்ளடக்கிய, 'மெட்ராஸ் ராஜதானி' என்ற சென்னை மாகாணம் இருந்தது.
அரசியல் கட்சி தலைவர்கள்,மொழி போராட்ட தியாகிகள் ஆகியோரின் கோரிக்கைகளின்படி, 1956, நவ., 1ல், சென்னை மாகாணத்தில் இருந்து, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா பிரிந்து, தனியாக மொழிவாரி மாநிலங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த மாநிலங்கள் எல்லாம் நவம்பர் 1ம் தேதியை மாநில அவதார தினமாக கொண்டாடுகின்றனர்.
தமிழகத்தில் இது போல இதுவரை கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டுதான் முதல் முறையாக தமிழ்நாடு நாள் என்று கொண்டாட, தமிழக அரசு முடிவு செய்து அறிவித்தது. அதன்படி இன்று , 'தமிழ்நாடு நாள் ' கொண்டாடப்படுகிறது.
வந்தாரை வாழ வைக்கும் சென்னையைத் தலைநகரமாகக் கொண்ட தமிழ்நாடு. தமிழுக்கு அமிழ்தென்று பேர் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு ஆறு கோடி மக்கள் வாழும் நாடு எங்கள் தமிழ்நாடு. 32 மாவட்டங்கள் உடையது நம் தமிழகம். கம்பன், அவ்வை, வள்ளுவர், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் போன்ற பல கவிஞர்களை உள்ளடக்கியது நம் தமிழ்நாடு.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. என்ன வளம் இல்லை நம் தமிழ்நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிமாநிலத்தில் ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில் உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில். மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சாவூர் பெரிய கோவில், திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார்க் கோவில், நாகூர் தர்கா, கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், பழனி மலை முருகன் கோவில், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில்,சிதம்பரம் நடராஜர் கோவில்,மெரினா கடற்கரை போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் இங்குள்ளன. நவக்கிரகக் கோயில்கள் உள்ளன.
இங்கு விவசாயம் மட்டுமல்லாமல் நெசவுத்தொழில், மீன்பிடித் தொழில் போன்ற பல தொழில்கள் நடக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இங்கே பிரசித்தம். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், வண்டலூர் உயிரியல் பூங்கா, முதுமலை மற்றும் முண்டந்துறை ஆகிய சரணாலயங்களைக் கொண்ட நாடு.
கல்வி கேள்விகளில் சிறந்த மாநிலம் நம் தமிழ்நாடு. காவிரித்தாய் தமிழ்நாட்டு மக்களைக் காக்கிறாள். மாமல்லபுரம் சிற்பங்கள் மற்றும் சித்தன்ன வாசல் ஓவியங்கள் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானவை.தாய்மொழியாம் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் எல்லை கன்னியாகுமரி. பாரம்பரிய நடனம் பரதநாட்டியம். ஒவ்வோர் ஊருக்கும் ஒரு பெருமை. தூத்துக்குடி விசாகப்பட்டினம் கன்னியாகுமரி எண்ணூர் போன்ற இடங்களில் துறைமுகமும் மதுரை, சென்னை,திருச்சி போன்ற இடங்களில் வான்வழிப் போக்குவரத்து உள்ளது.
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு.வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-
சாதி மதம் போன்றவற்றால் வேறுபட்டாலும் தமிழர் என்ற உணர்வால் ஒன்றிணைவோம். தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்று தமிழ்நாட்டில் பிறந்ததை எண்ணிப் பெருமை கொள்வோம்.
- ஜி.உமா