"AI சிலரை பணக்காரர்களாக்கும்! பல லட்சம் பேரின் வேலையை காலி செய்யும்!" AI காட்ஃபாதர் நேரடி எச்சரிக்கை
சியாட்டில்: ஏஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இது மிகப் பெரிய ஆபத்தாக முடியலாம் என்று ஏஐ காட்ஃபாதர் ஜெஃப்ரி ஹிண்டன் எச்சரித்துள்ளார். இந்த ஏஐ ரேஸில் எலான் மஸ்க் போன்ற வெகு சில தொழில்நுட்பப் பணக்காரர்கள் மட்டுமே வெல்ல முடியும் என்ற அவர், பல லட்சம் பேர் இதனால் வேலையிழக்கும் சூழல் உருவாகும் என்றும் எச்சரித்தார்.
இந்த நவீனக் காலத்தில் ஏஐ வளர்ச்சி மிக வேகமாக இருக்கிறது. பல்வேறு துறைகளிலும் கூட ஏஐ படுவேகமாக வளர்ந்து வருகிறது. பல முன்னணி நிறுவனங்களும் கூட ஏஐ துறைக்கே அதிகம் செலவிடுகின்றன. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் அடுத்த ஆண்டு மைக்ரோசாஃப்ட், அமேசான், ஆல்பபெட் மற்றும் மெட்டா ஆகிய நிறுவனங்கள் சுமார் 420 பில்லியன் டாலரை மூலதனச் செலவுக்கு ஒதுக்கியுள்ளன. இதில் பெரும்பாலான நிதி AIக்கு தான் ஒதுக்கப்படுகிறது.

ஏஐ காட்ஃபாதர் எச்சரிக்கை
இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு துறையின் "காட்ஃபாதர்" என்று அழைக்கப்படும் நோபல் பரிசு பெற்ற ஜெஃப்ரி ஹிண்டன், ஏஐ வளர்ச்சி சிலரை மட்டும் பணக்காரர்களாக மாற்றி, பல லட்சம் பேரின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் என்று எச்சரித்துள்ளார். எலான் மஸ்க் போன்றவர்கள் இதன் மூலம் மேலும் பணக்காரர்களாக மாறுவார்கள் என்றும் அதே நேரத்தில் பலரின் வேலைகளை AI அபகரிக்கும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், ஏஐ ஏற்படுத்தும் இந்த வேலையிழப்பு உடனடியாக நிற்க வாய்ப்பில்லை என்றும் ஹிண்டன் தெரிவித்தார்..
என்ன நடக்கிறது
கடந்த சில ஆண்டுகளாகவே தொழில்நுட்பத் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக ஏஐ வந்த பிறகு அமேசான், கூகிள், ஐபிஎம், டிசிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் ஏகப்பட்ட வேலையிழப்புகள் நடந்துள்ளன. இது மேலும் அதிகரிக்குமோ என்று பலரும் அஞ்சும் நிலையில், ஹிண்டனின் எச்சரிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
வேலையிழப்புகள்
இது தொடர்பாக வால் ஸ்ட்ரீட் வீக் நிகழ்ச்சியில் பேசிய ஹிண்டன், "பெரிய நிறுவனங்கள் AIஐ அதிகம் நம்ப ஆரம்பித்துள்ளன. பல வேலைகளில் மனிதர்களுக்குப் பதிலாக ஏஐ டூல்களை கொண்டு வரலாம் என நினைக்கிறார்கள். ஏனென்றால் ஏஐ மூலமாகவே பெரிய லாபம் கிடைக்கும். பொதுமக்களின் வேலையைப் பறிக்காமல் ஏஐ பலன்களை மட்டும் எடுத்து கொள்ள வாய்ப்பு இருக்கிறதா என சிலர் கேட்கிறார்கள். ஆனால். அது சாத்தியமில்லை.. அதிகப் பணம் சம்பாதிக்க, மனிதர்களுக்குப் பதிலாக ஏஐ-ஐ பயன்படுத்துவார்கள்.
ஒரு சிலருக்கு மட்டுமே லாபம்
எலான் மஸ்க் போன்ற ஒரு சிலர் மேலும் மேலும், பணக்காரர்களாக மாறுவார்கள்.. அதே நேரத்தில் பலர் தங்கள் வேலைகளை இழப்பார்கள்.. ஆனால், அதைப் பற்றி எல்லாம் கோடீஸ்வரர்களுக்கு கவலையே இருக்காது. மேலும், இது AIஇன் பிரச்சனை அல்ல; இது ஒரு சமூகப் பிரச்சனை" என்று அவர் தெரிவித்தார். எலான் மஸ்க் போன்ற தொழில்நுட்பக் கோடீஸ்வரர்கள் மட்டுமே AI ரோஸில் வெல்வார்கள் என்றும் பெரும்பாலான மக்கள் AIயால் தூக்கி எரியப்படுவார்கள் என்றும் ஹிண்டன் கூறினார்.
அதேநேரம் ஏஐ செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும் தான் சொல்லவில்லை என்று ஹிண்டன் தெளிவுபடுத்தினார். ஏஐ மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்றும் குறிப்பாகப் பல தொழில்களில் உற்பத்தித்திறனை அதிகரிப்பது ஏஐ அதிகரிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications