Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீராத நோய் தீர்க்கும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம்.. எட்டு அமாவாசை வழிபட்டால் என்னென்ன நன்மைகள்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சதுரகிரியில் எழுந்தருளும் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கத்தை அமாவாசை, பவுர்ணமி தினங்களில் தரிசனம் செய்தால் தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சதுரகிரி: மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர்.

Aadi Amavasai : Sathuragiri Sundaramahalingam temple Dharsan relief stress and disease

சித்தர்கள் உலாவும் மலை: சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். மலைச் சாரலில் உள்ள தவசிகள் குகையில் சித்தர்கள் இன்றும் தவம் செய்து வருகின்றனர். ஒளி வடிவ உடல் தாங்கி, நிர்வாண கோலத்தில் தவபுருஷர்களும் சித்தர்களும் தவம் செய்வதாகவும், இவர்களின் தவத்திற்கு யாரும் இடையூறு செய்யாதபடி சித்தர் பரிவாரங்களும் வனதேவதைகளும் வண்டு, கரடி, புலி போன்ற வடிவங்களில் பாதுகாப்பு தருவதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.

நோய்கள் நீக்கும் மலை: சித்தர்கள் உலாவும் அந்த மலையில் ஏறி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கத்தை தரிசித்தால் தீராத நோய்கள் தீரும், பதினெட்டு சித்தர்களின் அருளாசியும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். எனவேதான் அமாவாசை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமல்ல மன அழுத்தம், மன பாரம் கூட நீங்குகிறது என்பது இந்த கோவிலுக்கு சென்று வந்தவர்களின் அனுபவம்.

ஆடி அமாவாசை: சதுரகிரி சித்தர்கள் வாழும் தேசம், மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், சுந்தர மகாலிங்கம். சிவன், அம்மையப்பர் உரு எடுத்தது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் தலத்தில்தான். அன்னை பார்வதி தேவி சந்தனக் குழம்பில் லிங்கத்தை உருவாக்கி அதன் முன் அமர்ந்து தவம் செய்து, சிவனுடன் இடப்புறம் அமர்ந்த தலமிது. கல்லாலமரம் என்ற விருட்சத்தின் அடியில் சந்தன மகாலிங்கத்தை ஸ்தாபித்து அன்னை பார்வதி விரதம் இருந்த நாள் ஆடி அமாவாசை.

புனிதமான ஆலயம்: சதுரகிரி என்பது கயிலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை தொழ வானில் இருந்து தேவர்கள் வருகிறார்கள் என்கிறார் அகஸ்தியர். ஆடி அமாவாசை திதியில் இந்த சந்தன லிங்கேஸ்வரரை தொழுதார்க்கு உறுதியாய் காம்யலோகம் கிட்டும் என்றும் கூறியுள்ளார். இன்றும் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை வணங்கி மகிழ்கின்றனர் என்கிறது, அகஸ்தியர் நாடி.

சந்தனமகாலிங்கம்: காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சந்தன மகாதேவி சமேத சந்தன மகாலிங்கேஸ்வரரை வணங்கினால் வாழ்வின் அனைத்து அபிலாஷைகளும் வாழ்வில் நிறைவேறும் என்கின்றனர் கோரக்கர் உள்ளிட்ட அனைத்து சித்தர்களும். சதுரகிரியில் கோரக்கர் தங்கி தவமியற்றிய குகை, இன்றும் கோரக்கர் குகை என விளங்குகிறது. இங்கு உறைகின்ற தாணிப்பாறை கணேசன், ராஜகாளி அம்மன், பேச்சி அம்மன் மூவரும் எப்படிப்பட்ட பேய் பிசாசுகளையும் விரட்டும் ஆற்றல் கொண்டவர்கள். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் இங்குள்ள நீர் நிலைகளில் புனித நீராடி இறைவனை வணங்குவது மிகவும் புண்ணியம் என்கிறது நாடி.

நோய்கள் குணமாகும்: எட்டு ஆடி அமாவாசை தொடர்ந்து வனதுர்க்கைக்கும் சங்கர நாராயண லிங்கமான இரட்டை லிங்கத்திற்கும், பிலாவடி கருப்பசாமிக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், செல்வம் கொழிக்கும், தொழில் விருத்தி அடையும். வம்சாவளியாக வரக்கூடிய சர்க்கரை நோய் கண்டிப்பாக குணம் ஆவதுடன், அந்த வம்சத்தினருக்கே இதய நோய், காமாலை போன்ற கொடிய நோய்கள் பாதிக்காது என்கிறார், அகஸ்தியர்.
இங்குள்ள நடுக்காட்டு நாகரையும் வெள்ளை விநாயகரையும் ஞாயிற்றுக்கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தியில் அஸ்தமன வேளையில், வெண்பட்டு சாத்தி கொழுக்கட்டை நிவேதனம் செய்து எருக்கம்பூவினால் ஹோமம் செய்பவருக்கு சித்தர்கள் காட்சி கிடைப்பதுடன், கண் நோய், சிறுநீரக கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையும் நீங்கும் என்கிறார், கோரக்கர். பல்வேறு சிறப்புகள் கொண்ட சதுரகிரி மலைக்கு ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று சுந்தரமகாலிங்கத்தையும் சந்தன மகாலிங்கத்தையும் தரிசனம் செய்து வாருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+