ஆடி மாத ராசி பலன் 2022..ஆடியில் எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு பணம் கொட்டப்போகுது தெரியுமா?
ஆடி மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணியைப் பொருத்து துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்வதால் கடக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஆடி மாதம் தட்சிணாயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. தை முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கிப் பயணம் செய்வார். இது உத்தராயண புண்ணியகாலம் ஆகும். ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு திசையில் பயணம் செய்வார். சூரியனின் தென்திசைப் பயணம் தொடங்குவதை நாம் தட்சிணாயண புண்ணிய காலம் என்று சொல்கிறோம். ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி பிறக்கிறது. ஆகஸ்ட் 16ஆம் தேதி வரைக்கும் ஆடி மாதம் உள்ளது. இந்த மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கூழ் ஊற்றி அம்மனை வணங்குவார்கள்.
விஷ்ணு சயன ஏகாதசி, ஆடிப்பூரம், ஸ்வர்ண கவுரி விரதம், குரு பூர்ணிமா,ஆடிக் கிருத்திகை, ஆடிப் 18ஆம் பெருக்கு, நாக பஞ்சமி, கருட பஞ்சமி, கருடாழ்வார் ஜெயந்தி, ஆடி கிருத்திகை பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
94 குழந்தைகளை பலிகொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்து 18ம் ஆண்டு நினைவு தினம்! பெற்றோர் கண்ணீர் அஞ்சலி
துலாம்
தர்ம அதர்மங்களுக்கு ஏற்ப பலன்தரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே...
உங்கள் கோபத்தைத் தூண்ட மற்றவர்கள் முயற்சிப்பார்கள். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அன்பாகப் பழகுவது நல்லது. பிள்ளைகள் உங்களுடைய ஆலோசனையைக் கேட்டு நடந்து கொள்வார்கள். வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். நடைபாதை வியாபாரிகளுக்கு இது யோகமான காலகட்டம். ஏற்றுமதி இறக்குமதி தொழில் கணிசமான லாபத்தைக் கொண்டு வரும். கடினமாக வேலை செய்து காரியத் தடைகளை தகர்த்தெறிவீர்கள். பொதுநலப் பணிகள் மூலம் மரியாதையும் அந்தஸ்தும் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். மருதமலை முருகனை வழிபடுங்கள். துரிதமாகக் காரியங்கள் நடக்கும்.
விருச்சிகம்
போர்க்குணம் கொண்ட பூமிகாரகன் செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
உங்களின் அன்பான நடவடிக்கையால் குடும்பத்திலுள்ளவர்களை சந்தோஷப்படுத்துவீர்கள். புதிய நண்பர்கள் சேருவார்கள். அவர்கள் மூலமாக தொழிலுக்குத் தேவையான உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு பணிபுரிவார்கள். சிலருக்கு பதவி உயர்வோ புதிய பொறுப்போ கிடைக்கலாம். கமிஷன் வியாபாரங்களில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். பொருட்களை வாங்கி வைத்து விற்பதன் மூலம் பெரும் பணம் கிடைக்கும். சகோதரர் வழியில் ஏதாவது பிரச்சனை உண்டாகலாம். அதையும் அனுசரணையோடு தீர்த்து வைப்பீர்கள். மதுரை மீனாட்சி அம்மனை மனதால் வழிபடுங்கள். துரத்தும் துயரங்கள் மறைந்து போகும்.
தனுசு
வினைப்பயனை அறுக்கின்ற வியாழன் பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே...
ஒரு முடிவை எடுக்கும் முன்னதாக இரு முறை ஆலோசனை செய்து கொள்ளுங்கள். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை எளிதாக முடிப்பீர்கள். இந்த மாத வாஸ்து நாளில் புதிய வீடு கட்டுவதற்கான பூஜை போடுவீர்கள். எதிர்பார்த்த வங்கி லோன் தடையில்லாமல் வந்து சேரும். முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகமெடுக்கும். இரவு பகல் பார்க்காமல் வேலை பார்த்து தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசாங்க பொதுப்பணி வேலைகளில் ஒப்பந்தம் பெறுவீர்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களை மகிழ்ச்சிப்படுத்த ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள். பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். தொட்ட காரியம் துலங்கும்.
மகரம்
வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்படும். வேலை பார்த்த இடத்தில் சுமத்தப்பட்ட வீண் பழி அகலும். தொழிலை விரிவாக்கம் செய்ய பெருமுயற்சி எடுத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வார்கள். உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். முதலாளி கோபித்துக் கொள்கிறார் என்று அவசரப்பட்டு வேலையை விட்டுவிட வேண்டாம். வரன் தேடுவோருக்கு இந்த காலகட்டத்தில் கைகூடிவரும். திருமணப் பேச்சுவார்த்தை தடையின்றி நடக்கும். காண்ட்ராக்ட் தொழில் மூலம் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். கடந்த காலங்களில் இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். ஆஞ்சநேயர் பெருமானை வழிபடுங்கள். அவஸ்தைகள் நீங்கும்.
கும்பம்
சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...
ஆன்மீகச் சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். முக்கிய நபரின் அறிமுகத்தால் அரசாங்க வேலை நடக்கும். பணவரவு அதிகரித்து பழைய கடன்களை அடைக்கும் சூழ்நிலை உருவாகும். குடும்பத்தினருடன் கோடை வாச ஸ்தலங்களுக்குச் செல்வீர்கள். கடுமையாகப் படித்து கல்வியில் வெற்றி பெற மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவார்கள். வீட்டில் உள்ளவர்களுக்கு விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். தொழில் வியாபாரம் நல்ல நிலைக்கு உயரும். வீடு வாகனம் வாங்கும் யோகம் சித்திக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபடுங்கள். நினைப்பது நிறைவேறும்.
மீனம்
பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே...
வாகனங்களில் செல்லும்போது கவனச்சிதறல் ஏற்படக்கூடாது. கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். கைத்தொலைபேசியை காதில் ஒட்ட வைத்துக் கொள்ளாதீர்கள். விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண்கள் புத்திசாலித்தனமாக குடும்பத்தை நடத்துவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாகப் பணிகளை முடிப்பார்கள். வேலை அலைச்சல் காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டியிருக்கும். அடுத்தவர் மேல் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். பெற்ற தாயாக இருந்தாலும் கைப்பொருளை யோசித்துக் கொடுங்கள். ஆண் பெண்கள் இருபாலினரும் எல்லை தாண்டிப் பழகாதீர்கள். அதனால் அவமானம், தலைகுனிவு ஏற்படலாம். திருமோகூர் காளமேகப் பெருமாளை வழிபடுங்கள். கவலைகள் விலகி ஓடும்.
உங்கள் ஜோதிடர் கவிஞர்
அ.பெர்னாட்ஷா, காரைக்குடி
Recommended Video
ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். ஆனி 32 ஆம் தேதி மிதுன ராசியிலிருந்து சூரியன் கடக ராசிக்கு இடம் பெயர்ந்தார்.ரிஷப ராசியில் இருந்த புதன் ஆனி 32 ஆம் தேதி கடக ராசியில் அமர்ந்தார். பின்னர் ஆடி 15 ஆம் தேதி சிம்ம ராசிக்கு செல்கிறார். மிதுன ராசியில் நிற்கும் சுக்கிரன் 21ம் தேதி கடக ராசிக்குச் செல்கிறார். மேஷ ராசியில் இருக்கும் செவ்வாய் 25ஆம் தேதி ரிஷபராசிக்கு இடம் பெயர்கிறார். சனி வக்ர கதியில் மகர ராசியில் இருக்கிறார். இந்த கிரகப்பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.