அக்னி நட்சத்திரம் 2022: அக்னி ஆட்டம் ஆரம்பம்.. நோய்களில் இருந்து தப்பிக்க எந்த தெய்வத்தை வழிபடலாம்
அக்னி நட்சத்திர நாட்களில் பரணி நட்சத்திரத்திற்கு உரிய துர்க்கையையும், கிருத்திகைக்குரிய தேவதை அக்னியையும் வழிபட்டால் நற்பலன் கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்திற்குரிய பிரம்மனையும் வழிபடலாம்.
மதுரை: அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டது. மே 4 முதல் 29 வரை இனி வெயில் வாட்டி எடுக்கும். வெயில் காலத்தில் கோடை கால நோய்களான வேனல் கட்டி, அம்மை, கண் பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
மண்டை எலும்புக்குள் பாதுகாப்பாக இருக்கும் மூளை கூட உருகும் அளவிற்கு வெயில் சுட்டெரிக்கிறது. தலையில் நேரடியாகப் படும் வெயிலினால் மூளை நரம்புகள் பார்வை நரம்புகள் போன்றவை பாதிக்கப்பட்டு பித்தம் அதிகரித்த நிலையில் ஒற்றை தலைவலி மற்றும் பார்வை கோளாறுகள்,முடி கொட்டுதல் ஏற்படுகின்றது. கோடைகாலத்தில் பலருக்கும் அடிக்கடி சிறுநீரக கோளாறுகள், நீர் சுருக்கு ஏற்படுகின்றது. கொப்புளம், அம்மை, அக்கி போன்ற தோல் நோய்களை ஏற்படுத்தி விடுகிறது.
அக்னி நட்சத்திர காலத்தில் தண்ணீர், நீர் மோர், விசிறி உள்ளிட்ட பொருட்களை தானம் செய்வதன் மூலம் கோடை கால நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்.
சில நாட்களில் அக்னி நட்சத்திரம்.. 11 நகரங்களில் சதமடித்த வெயில்! எங்கு அதிகபட்ச வெப்பம் தெரியுமா
அக்னி நட்சத்திரம் புராண கதை
இந்த அக்னி நட்சத்திரம் குறித்து புராணம் கதை ஒன்று உள்ளது. அதை தெரிந்து கொள்வோம். யமுனை ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள காட்டின் பெயர் காண்டவ வனம். இந்தக் காட்டிற்குள் அரிய மூலிகைச் செடிகள் இருப்பதால் அதன் மணம் ஆற்றங்கரைக்கு வருபவர்களைக் கவரும். இந்திரனின் காவலில் உள்ள அந்த வனத்தில் அரிய மூலிகைகள் செழித்து வளர, அவ்வப்போது மழைபெய்யச் செய்தான் மழையின் அதிபதியான இந்திரன்.
அக்னி தேவனின் பசி
இயற்கையின் எழிலுடன் மூலிகையின் மணமும் வீசிக்கொண்டிருந்த இதமான சூழ்நிலையில், யமுனை நதியில் கண்ணனும் அர்ச்சுனனும் அவர்களுடைய தோழர்களும் நீராடி மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் கரையேறும்போது ஓர் அந்தணர் வந்தார். அவர், கண்ணனையும் அர்ச்சுனனையும் பார்த்து, "உங்களைப் பார்த்தால் கருணைமிக்கவர்களாகத் தெரிகிறீர்கள். எனக்கு அதிக பசி. என் பசிக்கு உங்களால்தான் உதவமுடியும். இந்த வனத்தில் என் பசிப்பிணியைத் தீர்க்கும் மருந்து உள்ளது. நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்'' என்று வேண்டினார்.
அக்னி தேவனை தாக்கிய நோய்
அந்த அந்தணரின் பேச்சு வித்தியாசமாக இருக்கவே, கண்ணன் அந்த அந்தணரை உற்றுப் பார்த்தார். "அக்னிதேவனே! ஏன் இந்த வேடம்? நேரிடையாகவே எங்களிடம் உங்கள் பசிப்பிணிக்கு உணவு கேட்கலாமே'' என்று கண்ணன் சொன்னதும் தன் வேடத்தைக் கலைத்தார் அக்னிதேவன். "உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் பரமாத்மாவே! தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. சுவேதசி என்ற மன்னனுக்காக துர்வாச முனிவர் நூறாண்டுகள் தொடர்ந்து யாகம் ஒன்றை நடத்தினார். யாகத்தின் விளைவால், அதிகப்படியான நெய்யை உட்கொள்ளும் நிலைக்கு நான் ஆளானேன். அதனால் மந்த நோய் என்னைத் தாக்கிவிட்டது. அந்த மந்த நோய் நீங்குவதற்குத் தகுந்த மூலிகைச் செடிகள் இந்த வனத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள அரிய மூலிகைகளை நான் கபளீகரம் செய்தால் என் பிணி தீரும்'' என்றார்.
மழையை தடுத்த அர்ச்சுனன்
அதற்கு எங்கள் தயவை ஏன் நாடுகிறீர்கள்?'' என்றான் அர்ச்சுனன். "நான் இந்த வனத்திற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும்பொழுதெல்லாம், இந்திரன் மழை பெய்ய மேகங்களுக்கு உத்திரவிட்டு, என் தீ நாக்குகளை அணைத்து என் முயற்சியைத் தடுத்துவிடுகிறான்'' என்றான். கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்து சிரித்தார். கண்ணன் சிரிப்பின் பொருளைப் புரிந்துகொண்ட அர்ச்சுனன், "அக்னி தேவனே, நாங்கள் உனக்கு உதவுகிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. இந்த உதவிக்கு உபகாரமாக வில்லும் அம்பாறாத்தூணியும் அம்புகளும் வேண்டும். ஏனென்றால் நாங்கள் இங்கு நீராடத்தான் வந்தோம். எனவே இந்திரன் மழை பெய்வித்தால் தடுப்பதற்கு வில்லும் அம்புகளும் தேவை'' என்றான். உடனே, அர்ச்சுனனுக்காக சக்திமிக்க காண்டீப வில், அம்புகள், அம்பறாத்தூணி என எல்லாவற்றையும் தந்தான் அக்னி பகவான். அப்பொழுது கண்ணன், "அக்னிதேவனே, உன் பிணியைத் தீர்த்துக்கொள்வதற்காக 21 நாட்கள் மட்டும் இந்தக் காட்டிற்குள் பிரவேசிக்கலாம். அந்தச் சமயத்தில் இந்திரன் மழைபொழியாமல் பார்த்துக்கொள்கிறோம்'' என்றார்.
21 நாட்கள் வனத்தை எரித்த அக்னிதேவன்
அக்னிதேவன் வனத்திற்குள் பிரவேசித்து வனத்தை எரிக்கத் தொடங்கினான். இதைக் கண்ட இந்திரன் மழை பெய்விக்க காளமேகத்திற்கு உத்திரவிட்டான். மேகங்கள் கூட்டம் கூட்டமாக வானில் வருவதைக் கண்ட கண்ணன் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சுனன் அந்த வனத்தில் மழை பொழியாமலிருக்க "சரக்கூடு' ஒன்றை தன்னிடம் உள்ள அம்புகளால் கட்டித் தடுத்தான். அக்னியும் முதல் ஏழு நாட்கள் வேகமாக தன் பசிக்கு வனத்தில் உள்ள மூலிகைப் பகுதிக்குள் நுழைந்து கபளீகரம் செய்தான். அடுத்த ஏழு நாட்கள் சுற்றியிருக்கும் அரிய மரங்களை உணவாகக் கொண்டான். அடுத்த ஏழு நாட்கள் மிதமாக உண்டு, இறுதியில் கண்ணனிடமும் அர்ச்சுனனிடமும் விடைபெற்று வெளியேறினான். இவ்வாறு அக்னிதேவன் காண்டவ வனத்தை எரித்த நாட்களே அக்னி நட்சத்திர நாட்கள் என்று புராணம் கூறுகிறது.
கோடை கால நோய்கள்
ஜோதிட ரீதியாக கோடை காலத்தில் ஏற்படும் நோய்களுக்கு என்ன காரணம் என்று பார்க்கலாம். கோடையில் ஏற்படும் நோய்களுக்கு முக்கூட்டு கிரகங்களான சூரியன்+புதன்+சுக்கிரன் ஆகிய மூன்று கிரங்களோடு செவ்வாயும் சேர்ந்து அதிக விளைவுகளை ஏற்படுத்தினாலும் அனேக வியாதிகளுக்கு சுக்கிரனே காரணமாக அமைந்துள்ளது. தற்போது மேஷ ராசியில் சூரியன், புதன் கூட்டணி அமைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் சுக்கிரனும் மேஷத்தில் குடியேறுவார். இந்த கூட்டணி மக்களுக்கு பலவித நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன், சூரியன், சுக்கிரன், புதன் எப்படி அமைந்துள்ளது என்பதைப் பொருத்தே சரும பிரச்சினையும் சரும நோய்களும் ஏற்படுகிறது. சந்திரன் மனதிற்கு காரகர். மன அழுத்தம் ஏற்பட்டால் சருமம் வறட்சியடைகிறது. இதனால் தோல்நோய்கள் எளிதாக ஏற்படுகிறது. தூக்கக் குறைபாடும் ஏற்படுகிறது. எனவே அதிக அளவில் தண்ணீர் பருகவேண்டும். இயற்கையான ஜூஸ்களை குடிக்கலாம்.
அம்மன் கோவில்களில் அபிஷேகம்
சரும நோய்களுக்கு சுக்கிரன்தான் காரகம். கோடை நோய்களுக்கு காரக கிரகமான சுக்கிரனே அதற்கான தீர்வையும் காட்டுகிறார். கோடை நோய்களை தவிர்க்க சுக்கிரனின் அம்சமான சுத்தமான குடிநீரை நிறைய குடித்துவந்தாலே பல பல வியாதிகளை தவிர்த்துவிடலாம் என ஆயுர்வேதமும் மருத்துவ ஜோதிடமும் கூறுகிறது. சுக்கிரனை காரகமாக கொண்ட இளநீரை கோடை காலத்தில் அதிகம் குடிக்கலாம். கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பை தணிக்க வேப்பிலை, மஞ்சள் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்தவேண்டும். கோயில்களில் இறைவன், இறைவிக்கு திருமஞ்சனம், அபிஷேகம் செய்வதும் கண்குளிர காண்பதும் சிறப்பு. அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கலாம். அபிஷேகத்திற்கு இளநீர், தேன், சர்க்கரை,பூக்கள் போன்றவை வாங்கி கொடுக்கலாம் பாதிப்புகள் குறையும்
ஆலய வழிபாடு நோய் நீக்கும்
அக்னி நட்சத்திர காலத்தில் தான தருமம் செய்வதோடு முருகனையும், அன்னை மீனாட்சியையும் வழிபடலாம். பரணி நட்சத்திரத்திற்கு உரிய தேவதையான துர்க்கையையும், கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவன்,ரோகிணி நட்சத்திரத்திற்கு உரிய பிரம்மாவையும் வழிபடலாம். முருகன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
சூரியனை வணங்கலாம்.
உஷ்ணநோய் பாதிக்காமல் இருக்க, அரிசி மாவினால் சூரிய நவகிரக கோலமிட்டு, 'அஸ்வத் த்வஜாய வித்மஹே! பாஸ ஹஸ்தாய தீமஹி! தன்னோ சூர்ய ப்ரசோதயாத்!' என சூரிய காயத்ரீ சொல்லி வழிபடுவது சிறப்பு. பாஸ்கராய வித்மஹே! மஹத் யுதிகராய தீமஹி! தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத் என்று கூறி சூரியனை வழிபட பாதிப்புகள் நீங்கும். ஏழைகள், அந்தணர்கள் இயலாதவர்களுக்கு விசிறி, காலணி, குளிர்ந்த நீர், மோர், இளநீர், பானகம், தயிர்சாதம் கொடுப்பது விசேஷம். முடிந்தால் பறவைகள், ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு குடிக்க தண்ணீர் வைக்கலாம்.