ஏப்ரல் மாத ராசி பலன் 2021: மேஷ ராசிக்கு மன மகிழ்ச்சி அதிகரிக்கும் பண வருமானம் தேடி வரும்
ஏப்ரல் மாதத்தில் கிரக மாற்றங்கள் அதிகம் உள்ளன. நவ கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தினால் மேஷ ராசிக்காரர்களுக்கு மன மகிழ்ச்சி அதிகரிக்கும் திடீர் பண வருமானம் வரும்.
சென்னை: உச்சம் பெற்ற சுக்கிரன், சூரியன் மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய அற்புதங்களை கொடுக்கப் போகிறது. ஏப்ரல் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நவகிரகங்களின் நாயகன் சூரியன் மீன ராசியில் பயணிக்கிறார் உச்சம் பெற்ற சுக்கிரன், ரிஷபத்தில் செவ்வாய் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, குரு, கும்ப ராசியில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஏப்ரல் மாதம் மேஷ ராசிக்கு மன மகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் நிறைந்த மாதமாக அமையப்போகிறது.
கிரக பெயர்ச்சியைப் பார்த்தால் ஏப்ரல் மாதத்தில் சூரியன் மீன ராசியில் இருந்து 14ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்று உச்சமடைகிறார். உச்சம் பெற்ற சூரியனின் பார்வை துலா ராசியின் மீது விழுகிறது. சுக்கிரனும் மேஷ ராசியில் பயணிக்கிறார். புதன் நீசம் பெற்று சஞ்சரிப்பார்.
குரு பகவான் ஏப்ரல் 5ஆம் தேதி மகர ராசியில் இருந்து அதிசார பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு உடன் இணைந்துள்ள செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி மேஷ ராசிக்கு ஏப்ரல் மாதம் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
அற்புதமான மாதம்
மேஷ ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யும் சூரியன் 14ஆம் தேதி உச்சமடைகிறார். சனி பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். லாப ஸ்தானத்தில் குரு வருகிறார். செவ்வாய் இந்த மாதம் தன ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்கிறார். இந்த மாதம் ரொம்ப நல்ல மாதம் தொழில் வளமடையும் வேலையில் உற்சாகமாக செயல்படுவீர்கள். குருவின் சஞ்சாரம் உங்களுக்கு நன்மையைத் தரப்போகிறது. வேலையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். அரசுத்துறையை சார்ந்தவர்களுக்கு அற்புதமான மாதம்
சந்தோஷம் அதிகரிக்கும்
உங்கள் ராசி நாதன் செவ்வாய் மாத பிற்பகுதியில் ராகுவிடம் இருந்து விலகி விடுகிறார். செவ்வாய் மூன்றாம் வீட்டிற்கு நகர்கிறார்.
எப்பொழுதும் பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வேலை செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் நோய்கள் நிவர்த்தி அடையும். உச்சம் பெற்ற சுக்கிரனால் நிறைய சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கல்வி கற்கும் மாணவர்கள் உற்சாகமாக இருப்பீர்கள். இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சிகரமான மாதம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.
சுப காரியம் கைகூடும்
கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். வேலையில் திடீர் புரமோசன் வரும். ஏப்ரல் 5 முதல் குரு பத்தாம் வீட்டில் இருந்து லாப ஸ்தானத்திற்கு வருகிறார். சுப காரியம் கை கூடி வரும். அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு இது யோகமான கால கட்டம். புதன் இந்த மாதம் விரைய ஸ்தானத்தில் நீசமாக இருப்பதால் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்துங்கள் அனல் வீசும் பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். இந்த மாதம் வேலை விசயங்களில் கவனம் தேவை.
பேச்சில் நிதானம் தேவை
மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தவும். நிதி நெருக்கடிகள் நீங்கும். தங்க நகைகளை அடகு வைக்க வேண்டாம் தவிர்த்து விடுங்கள். கிரக சூழ்நிலைகள் மாத பிற்பகுதியில் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. கண் பிரச்சினைகள் நீங்கும். அலுவலகத்தில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும். யார் மனதையும் புண் படுத்தும் வகையில் பேச வேண்டாம்.
கவனம் தேவை
வேலை செய்யும் இடத்தில் விழிப்புணர்வும் கவனமும் தேவை. உயரதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம். பிள்ளைகள் விசயத்தில் கவனமாக இருக்கவும் கண்காணிப்பும் அவசியம். சிவன் கோவிலுக்கு சென்று அம்பாளை வழிபடலாம். நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லி வணங்கலாம். சிவனுக்கு பாலாபிஷேகத்திற்கு பசும்பால் வாங்கிக் கொடுக்கலாம்.