2025 சனிப்பெயர்ச்சி: மேஷம் ராசிக்கு ஏழரை சனி ஆரம்பம்.. நல்லதா? கெட்டதா? என்ன நடக்கும் முழு விவரம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நிகழப் போகும் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். ஒரு ராசியில் அதிக காலம் பயணம் செய்யும் கிரகம் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு ஏழரை சனி தொடங்குகிறது. மேஷ ராசியினருக்கு இந்த சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கும், என்ன விதமான பலன்கள் கிடைக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.
நீதியை நிலைநாட்டக் கூடியவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மேஷ ராசியினருக்கு ஏழரை சனி தொடங்குகிறது. மேஷ ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்படம் போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷம்: மேஷ ராசியைப் பொருத்தவரை ஏழரை சனி ஆரம்பிக்கப் போகிறது. ராசிக்கு 12 ஆம் இடத்துக்கு சனி பகவான் வருகிறார். இது விரைய சனி. அதாவது ஏழரை சனியின் முதல் இரண்டரை ஆண்டு காலம். 2027 இல் ஜென்ம சனி ஆரம்பிக்கும். 2029 இல் பாதசனி ஆரம்பிக்கும். ஏழரை சனியின் ஆரம்பமான விரைய சனியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மிகவும் சிறப்பாக இருக்கும்.
வெளிநாட்டுக்குச் சென்று வேலை செய்வது மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏற்கனவே வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு சிட்டிசன்ஷிப், பிஆர் போன்ற விஷயங்களில் நல்ல வாய்ப்பு ஏற்படும். 12 ஆம் இடத்துக்கு சனி வருவதால் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள். தூக்கம் கெடும் வாய்ப்புள்ளது.
அதிகமான வேலைச் சுமை ஏற்படும். வேலைச் சுமையால் மன அழுத்தம் ஏற்படும். சமுதாயத்தில் உங்கள் மீதான அழுத்தம் அதிகரிக்கும். அவப்பெயர் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. செய்யாத தவறுக்கு பழியை ஏற்க வேண்டிய சூழல் உண்டாகும். அட்வைஸ் கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. 12 ஆம் இடத்தில் சனி இருந்து 3 ஆம் பார்வையாக ராசிக்கு 2 ஆம் வீட்டை பார்ப்பதால் நீங்கள் யாருக்கேனும் ஆலோசனை சொன்னால், அந்த ஆலோசனை தப்பாக முடிவதற்கான வாய்ப்புள்ளது.
நீங்கள் ஆலோசனை, அறிவுரை சொல்லிதான் இப்படியாகிவிட்டது என்ற நிலை ஏற்படும் என்பதால் அட்வைஸ் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாமல் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் தர்க்கம் செய்யும் சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே சண்டை, சச்சரவுகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேபோல நண்பர்களிடம், அலுவலகத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.
12 ஆம் இடத்தில் சனி இருப்பதால் ஒரு இடத்தில் தேங்கி இருக்கக் கூடியதற்கான சூழல் ஏற்படும். ஒவ்வொருவரின் சுய ஜாதகத்தில் 12, 4 ஆம் இடம் கெட்டுப்போய் அந்த சந்திரனிடம் எந்த கிரகமும் சேரவில்லை என்றால் விமுல யோகம் என்று கூறப்படும். இந்த நிலை இருந்தால் சிறைக்குச் செல்லும் அமைப்பு உள்ளது. மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும்.
நீண்டகால நண்பர்கள், பழைய நண்பர்களுடன் சிறிய சிறிய பிரிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. சிறிய இடைவெளிகள் பெரிய இடைவெளியாக மாறக்கூடிய சூழல் உள்ளது. சனி 12 ஆம் இடத்துக்கு வருவதால் யாருடனும் பழகாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கத் தொடங்கிவிடுவதற்கான வாய்ப்புள்ளது. உங்களை யாரேனும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
குறை, இயலாமை, பிரச்சனை குறித்து நீங்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவதற்கான வாய்ப்புள்ளது. மற்றவர்களின் பேச்சுகளை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது நல்லது. அடுத்த இரண்டரை ஆண்டுகள் நீங்கள் செய்ய நினைக்கும் விஷயங்களை செய்ய முடியாமல் போகும். சிறிய சிறிய பிரச்சனைகள் வரும். மேஷ ராசியினருக்கு தன்னைப் பற்றிய பயம், பரிதாபம் உண்டாகும். ஏதாவதொரு விஷயத்துக்கு அடிமையாகும் சூழல் உண்டாகும்.
வெளிநாடு செல்லும் வாய்ப்பு அதன் மூலம் வெற்றி உண்டாகும். பூர்வீகச் சொத்துகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இஎம்ஐ இல் பொருள்களை வாங்காமல் இருப்பது நல்ல பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications