குருப்பெயர்ச்சி: கன்னி ராசியினர் மிஸ் பண்ணிடாதீங்க.. குருப்பெயர்ச்சியில் காத்திருக்கும் அதிர்ஷ்டம்
Guru Peyarchi Palangal: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் திருக்கணிதத்தின் படி சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்று பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டும், குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். குருப்பெயர்ச்சி வாக்கியத்தின்படி மே 11 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

குருவின் பிரசித்திபெற்ற கோயிலான ஆலங்குடி குரு ஸ்தலம் மற்றும் மற்ற சிவாலயங்களில் உள்ள குரு சந்நிதிகளில் வாக்கியப்படி மே 11 ஆம் தேதி விசேஷ பூஜைகள் நடைபெறும். குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் இருக்கக் கூடியவர். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வர கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகும். மே 14 ஆம் தேதி திருக்கணிதத்தின் படி இரவு 10.30 மணிக்கு குருப்பெயர்ச்சி நடக்கிறது. ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான்.
மிதுனம் என்பது குருவின் வீடு. மிதுனத்துக்கு குருவானாவர் பலவிதத்தில் உபத்திரவத்தை கொடுக்கக் கூடியவர். குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிக வலிமையாக இருக்கும். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி - குரு பகவான் உங்களுக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்துக்கு வருகிறார். குரு 2,4,6 ஆகிய இடங்களை பார்க்கிறார். ஜென்ம கேது விலகுகிறார். இது அற்புதமான பலன்களை கொடுக்கும். மனக்குழப்பங்கள் தீரும். அடுத்தடுத்த மாற்றங்களால் உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் வரப்போகிறது. வீடு, உத்யோகம், தொழில் என்று எல்லாவற்றிலும் நல்ல மாற்றங்கள் நிச்சயம் நடைபெறும்.
சொத்து
வாக்கு ஸ்தானம் பலமடையும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தாய், தந்தை உறவால் அணுகூலம் ஏற்படும். ரத்த சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும். பூர்வீக சொத்து, ரத்த பந்தம் சொத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி சொத்து சேரும். பழைய கடன் நிவர்த்தியாகும். ஆச்சர்யபடுமளவுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் உள்ளிட்டவை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
வெளிநாடு
வேற்று மொழி மனிதர்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். உள்ளூர், வெளியூர், வெளிநாடு பயணங்களால் அணுகூலமாகும். நீண்ட காலமாக வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு நல்ல தகவல் கிடைக்கும். ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பயணங்கள் நிறைவேறும். நீண்ட காலமாக திட்டமிட்ட விஷயங்கள் நிறைவேறுவதால் மனதில் நிம்மதி பிறக்கும்.
நிதானம்
உத்யோகம், தொழிலில் உயரதிகாரிகளை பகைத்துக் கொள்ள கூடாது. வாய்ப்புகள் அதிகளவு தேடி வரும். ஆனால் ஒரு வாய்ப்பு வருவதற்கு முன்பே கற்பனைகளை வளர்த்து கொண்டு அவசரப்பட்டு முடிவு செய்ய கூடாது. காரியம் நிறைவேறும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். பதறாத காரியம் சிதறாது. கழுகை போல பக்குவமாக நின்று இரையை பிடித்தால் எதிலும் வெற்றியே.
ஆரோக்கியம்
சுவாசம், ஒவ்வாமை சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் தேவை. வயிறு, காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருந்தால் உரிய மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம். இந்த காலத்தில் ஏற்படும் மாற்றங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டால் வாழ்வில் எப்போதும் முன்னேற்றமே. கன்னி ராசியினர் திருநள்ளாறு அல்லது திருகொள்ளிக்காடு கோயில் சென்று வழிபடுவதன் மூலம் தடைகள் நிவர்த்தியாகி நல்ல பலன்களை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications