குரு பெயர்ச்சி 2022: குரு தசை குரு புத்தி காலத்தில் யாருக்கெல்லாம் அரச பதவி தேடி வரும்
குருவின் அருள் இருந்தால் செல்வம் செல்வாக்கு தேடி வரும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது.
சென்னை: ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது. தனகாரகன் புத்திரகாரகன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டம் வர வாய்ப்பு இல்லை. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். குரு பகவான் திருவருள் பெற்றால் அமைச்சராகும் யோகம் வரும்.
நம் கை விரல்களில் ஆள்காட்டி விரல் குரு விரல் என்றும் அதன் அடியில் உள்ள மேடு குருமேடு என்றும் அழைக்கப்படும். அந்த மேட்டில் வளையம் போன்ற அமைப்பு உள்ளவர்கள் உயர்ந்த உன்னத பதவி, செல்வாக்கு, சொல்வாக்கு கொண்டவர்களாய்த் திகழ்வார்கள்.
காசியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பதினாயிரம் தேவ வருடங்கள் அதை நியமத்துடன் பூஜித்து ஈசனால் ஜீவன் எனும் பெயரால் அழைக்கப் பட்டு தேவேந்திரனுக்கே குருவாகும் வரத்தையும் பெற்றவர் குருபகவான் என காசிகாண்டம் எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுராசார்யார், வாகீசர், பீதாம்பரர், யுவர், த்ரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர், தயாகரர், நீதிகாரகர், தாராபதி, கிரஹபீடாபஹாரகர், ஸௌம்யமூர் த்தி என பல்வேறு பெயர்கள் குருவிற்கு உண்டு. குருபகவானின் மனைவி தாரை. மகன்கள் பரத்வாஜர், யமகண்டன், கசன்.அன்னப்பறவையும் யானையும் குருவின் வாகனங்களாகத் திகழ்வதாக புராணங்கள் கூறுகின்றன. தனுசு ராசிக்கும் மீன ராசிக்கும் தலைவரான குருவிற்கு தானியங்களில் கடலையும் ரத்தினங்களில் புஷ்பராகமும் மலர்களில் முல்லையும் சமித்தில் அரசும் சுவைகளில் இனிப்பும் உலோகங்களில் தங்கமும் சித்ரான்னங்களில் தயிர்சாதமும் உரியவை.

குரு பற்றிய பாடல்
"ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்
தீதிலாதொரு முன்றிலே துரியோதனன் படைமாண்டதும்
இன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்ததும்
ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்
தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனதும்
சத்தியமாமுனி யாறிலே இருக்கையில் தளை பூண்டதும்
வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும் என்று குரு பெயர்ச்சி பழம் பாடல்"மேற்கண்ட பலன்கள் அப்படியே நடக்கும் என்பது உறுதியில்லை. ஜாதகத்தில் குரு இருக்கும் இடம்,தசாபுத்தி நடப்பதைப் பொறுத்து கோச்சார பலன்கள் மாறுபடும்.

குருவினால் ஏற்படும் நன்மைகள்
ஜாதகத்தில் குரு இருக்கும் ராசி.லக்னம் ஆகியவை பொருத்தும் ஜன்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார் அதே நடக்கும் தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும். கோசாரத்தில் சுற்றி வரும் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் பொழுதும் யோகத்தையே செய்யும். அதே போல கோசார குரு ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்களை குரு தொடர்பு கொள்ளும் பொழுது குருபகவானால் நன்மையே நடக்கும்.

குரு பார்வையால் நன்மை
குரு பகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9ம் இடங்களை பார்வையிடுவார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை குரு பகவானின் நட்சத்திரங்கள்.

குருவின் தசா காலத்தில் என்ன பலன்
குரு தசை 16 வருடங்கள் கொண்டது. குரு தசை ஒருவருக்கு நடக்கும் போது 16 ஆண்டுகள் அவரை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நல்லது கெட்டதை நடத்தி வைப்பார் குரு பகவான். ஜோதிடத்தில் முழு சுப கிரகம் எனும் அமைப்பையும் பெருமையும் பெற்ற ஒரே கிரகம் இதுவே. வாழ்வின் ஆதாரமான தனம், குழந்தை வரம் இரண்டையும் அளிக்கக் கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு ஒருவரே.

ராஜயோகம் தரும் குரு
ராசி, அம்சத்தில் பலம் பெற்ற குரு அமர்ந்து விட்டால் அந்த ஜாதகருக்கு அந்த பலமே போதுமானது. குருதசை காலத்தில் கௌரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாகவே தேடி வரும். ஆன்மிக விஷயங்களில் ஜாதகர் ஆத்மார்த்தமாக ஈடுபடுவார். குரு பகவான் திருவருள் பெற்றால் அமைச்சராகும் யோகம் வரும். நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்ற அனைத்தையும் பெறலாம்.

குரு எங்கு இருந்தால் பலன்
குரு முழு சுப கிரகமாக இருப்பதால் அவருக்கு ஸ்தான, கேந்திர தோஷம் உண்டு. குரு எந்த இடத்தில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அப்படி சேர்க்கை பெறாமல் தனியாக இருப்பது சிறப்பல்ல. மத போதகர்கள், சொற்பொழிவாளர்கள், கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வோர், தர்ம ஸ்தாபனம் அமைத்திருப்பவர்கள், தலை சிறந்த வக்கீல் கள், நீதிபதிகள் போன்றோர் பரிபூரண குருவின் திருவருள் பெற்றவர்களே. குருவருள் கிடைக்க முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபடலாம். வியாழக்கிழமை நாளில் நவகிரக குரு பகவானுக்கும், சிவ ஆலயங்களில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வணங்கலாம்.

வியாழக்கிழமை விரதம்
வியாழக்கிழமையும் 3, 12, 21, 30ம் தேதிகளும் மஞ்சள் நிறமும் குருவின் அம்சங்களாகக் கருதப்படுகின்றன. குரு அருள் இல்லையேல் திருவருள் இல்லை. குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்று வாக்குகள் உண்டு. வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து, மாலை ஐந்து மணிக்கு மேல் வடக்கு முகமாக நெய் விளக்கேற்றி வைத்து குரு பகவானை வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கும். குரு பகவான் கருணைக்கடல், நீதிமான், களங்கமற்றவர் குருபகவான். வஜ்ராயு தம் தாங்கிய இவர் கற்பக விருட்சம் போல் பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்குபவர்.












Click it and Unblock the Notifications