சிம்ம ராசிக்கு மிகப்பெரிய ஜாக்பாட்.. டாப் கிளாஸ் யோகம்.. ரிலேஷன்ஷிப்பில் ரொம்ப கவனம்
குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை மாற்றும். அந்த வகையில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் தரக்கூடும்.

குரு சுபத்துவம் முழுமையாக பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள்.
அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் சிம்ம ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு லாப ஸ்தானம் எனும் 11 ஆம் இடத்துக்கு குரு போகப் போகிறார். மிகப்பெரிய அதிர்ஷ்டம் உண்டாகும் காலகட்டமாக இருக்கும். எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் லாபம் உண்டாகும். தர்மம், அறம், நெறி தவறாமல் செய்யும் விஷயங்கள் மூலமாக அபரிமிதமான பண வரவு உண்டாகும். எதைத் தொட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். புதன் வீட்டில் குரு அமர்ந்திருப்பது செல்வ செழிப்பைத் தரும்.
கல்லூரி முடிந்து இன்டெர்ன்ஷிப் போயிருந்தால் அங்கேயே வேலை செய்யும் யோகம் கிடைக்கும். மேலதிகாரியின் துணை கிடைக்கும். வாழ்க்கையில் வேலை, அந்தஸ்து, தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். சிம்மத்தில் பிறந்த பலருக்கு பெரிய பெரிய பதவிகள் கட்டாயம் கிடைக்கும். சனியினால் ஆரோக்கியம் கெடுவதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
தேவையில்லாத உறவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதில் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நமக்குத் தெரிந்தே சில விஷயங்களை மற்றவர்களுக்காக செய்யக்கூடிய நிலை ஏற்படும். லாப ஸ்தானத்தில் குரு வருவதால் நல்ல பெயர் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சமுதாயத்தில் மரியாதை, மதிப்பு அதிகரிக்கும்.
இதுவரை குழந்தைகளுடன் அந்நியோன்யம் இல்லாமல் இருந்திருக்கும். இனி அந்த நிலை மாறும். தினமும் குழந்தைகளுடன் பேசி மகிழ்வீர்கள். நிதி சார்ந்த விஷயங்களில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். புதிய வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். உங்களுடைய அடையாளமே மாறும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள், முன்னோர்களுக்கான விஷயங்கள் அற்புதமாக நடக்கும். ஆண் வாரிசு உருவாகும். படிப்பில் உள்ள தடைகள் நிவர்த்தியாகும்.
7 ஆம் இடத்தில் ராகு அமர்ந்துள்ளதால் நிறை மொழிகளைக் கற்றுக் கொள்ளும் யோகம் உண்டாகும். நிறைய மொழி பேசும் புதிய நபர்களை சந்திப்பீர்கள். வியாபாரம் பத்து மடங்கு உயரும். சங்கம், சமூகம், சட்டமன்றம், லாபம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெளிநாடு செல்லக்கூடிய யோகம் உண்டாகும். வெளிநாட்டில் புதிய கிளைகளைத் தொடங்கும் யோகம் உண்டாகும்.
சிம்மத்துக்கு குருவின் அருளால் ஓராண்டு அருமையான காலகட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. விட்டமின் சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தினந்தோறும் கீரை வகைகள் சாப்பிடுவது நல்லது. முட்டி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணம், பொருளாதாரம், லாபம் பன்மடங்காக இருக்கும்.
கவனம்
வயிறு தொடர்பான விஷயங்கள், உணவு விஷயங்களில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புதிய நபர்கள், வேண்டாத உறவுகள் வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
சிதம்பரம் நடராஜர் வழிபாடு அபரிமிதமான நன்மையைக் கொடுக்கும். 51 எலுமிச்சம்பழத்தை சுவாமிக்கு தானமாக கொடுப்பது நல்லது.
மதிப்பெண்
சந்தோஷம் மற்றும் பொருளாதார ரீதியாக 100க்கு 100 சதவீதம் நன்மை கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications