கன்னி ராசியினர் முன்கோபத்தை கைவிடுங்க.. இல்லாட்டி சிக்கல்தான்.. ஆனா வியாபாரத்தில் லாபம் கொட்டும்
பங்குனி மாத ராசி பலன்: மாசி மாதம் முடிவடைந்து பங்குனி மாதம் தொடங்குகிறது. இந்த பங்குனி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பங்குனி மாதம் பிறந்தாச்சு. மாதங்களில் அற்புதமான மாதமாக பங்குனி மாதம் குறிப்பிடப்படுகிறது. அதாவது, சூரிய பகவான் தனது குருநாதர், பிரகஸ்பதியாகிய, குருவாகிய மீனத்தில் வந்து அமர்ந்து இதுவரை தான் கற்ற பாடங்களை எல்லாம் தனது குருநாதரிடம் சொல்லி மதிப்பெண்கள் பெற்று தேர்விலே தேர்ச்சி அடையக்கூடிய மாதம் இந்த மாதம் பங்குனி மாதம்.

அதனால் தான், பரவலாக தேர்வு நடைபெறும் மாதமாக இயற்கையாகவே இந்த மாதம் இருக்கிறது. இதுவரை சம்பாதித்த சம்பாத்தியம், அதற்கான வருமான வரிகள், செலவுகள், சேமிப்பு என்ன என்று கணக்குப் பார்க்கும் மாதமாக இந்தப் பங்குனி மாதம் அமைந்திருக்கிறது. 12 ஆவது மாதமாகிய பங்குனி மாதத்தில் கடைசி நட்சத்திரமாக வரக்கூடிய பங்குனி உத்திரப் பெருவிழா இந்த சிறப்பு மாதத்தில் தான் கொண்டாடப்படும்.
விஷேசமான மாதமாகிய இந்த பங்குனி மாதத்தில்தான் ராமநவமி கொண்டாடப்படும். வழிபாட்டு மாதம், வைபவ மாதம், கல்யாண மாதம், தெய்வ திருமணங்கள் கூடிவரும் மாதம், தெய்வ மாதம் என்று அழைக்கப்படுகிறது பங்குனி மாதம். ராமர் சீதா தேவியை மணந்த மாதம், இலைகள் உதிர்ந்து பச்சை இலைகள் துளிர்க்கும் மாதம், ஸ்ரீ தேவேந்திரன் இந்திராணியை மணந்து கொண்ட மாதம், சந்திரன் 27 நட்சத்திரங்களை மணந்து கொண்ட மாதம், திருமாலின் திருமார்பில் ஸ்ரீ மகாலட்சுமி இடம்பிடித்த அற்புதமான மாதமாக இந்த பங்குனி மாதம் திகழ்கிறது.
இந்த பங்குனி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி ராசிக்காரர்களுக்கு செவ்வாயும் சனி பகவானும் 6 ஆம் இடத்தில் அற்புத பலத்துடன் இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் பங்குனி மாதம் பிறந்துள்ளதால் எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பழைய கடனை முடிப்பதற்கான காலகட்டமாக இருக்கும். சூரியன் 7 ஆம் வீட்டில் வந்து உட்கார்ந்து உங்களைப் பார்ப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. உங்களை மீறி நீங்கள் கோபப்படுவதற்கான வாய்ப்புள்ளது. முன்கோபத்தை தவிர்ப்பது நன்மை பயக்கும். உங்களுடைய ராசிநாதனான புதன் இந்த மாதம் முழுக்க பலவீனமாக இருப்பதால் அதிகமாகப் பேசி யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களுடைய ஆறுதலுக்காக குடும்ப அந்தரங்க விஷயங்களை பிறரிடம் சொல்வதை தவிர்ப்பது நல்லது.
உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான ரகசியங்களை ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்குள் விவாதங்கள், பிரிவுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சுக்கிரன் 6 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மார்ச் 31 ஆம் தேதி முதல் 6 ஆம் வீட்டை விட்டு 7 ஆம் வீட்டுக்குள் சுக்கிரன் வந்து அமருவதால் அதுமுதல் கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் ஏற்படும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த தொகைகள் உங்கள் கைக்கு வந்து சேரும். விலை உயர்ந்த தங்க நகைகளை வாங்குவீர்கள். இந்த மாதம் முழுவதும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அமோகமான விற்பனை நடைபெறும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சக ஊழியர்களின் ஆதரவு உண்டாகும்.
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இந்த மாதம் முழுக்க நீங்கள் தொட்ட காரியங்களில் வெற்றி பெற ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபடுவது நல்லது. திருநங்கைகளுக்கு உதவுவது, அன்னாசிப்பழம், மாதுளம்பழம் தானமாக வழங்குவது அமோகமான நற்பலன்களைப் பெறுவீர்கள்.












Click it and Unblock the Notifications