திருச்செந்தூரில் மாசி மகம் திருவிழா - பக்தர்கள் கண் குளிர நேரில் தரிசிக்கலாம் - அரசு அனுமதி
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித் திருவிழா வரும் 7ஆம் தேதியன்று தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசிமகத் திருவிழா வரும் 7ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம் போல் நடைபெறும் என்றும் பக்தர்கள் நேரடியாக விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.
தமிழ்க்கடவுளான ஆறுமுகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம், மற்றும் மாசி மகம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இவ்விழாக்களில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வரும் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக, இவ்விழாக்களில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு, விழா நிகழ்ச்சிகள் கோயில் வளாகத்திற்குள்ளேயே வெகு எளிமையாக நடத்தப்பட்டு அவற்றை பக்தர்கள் ஆன்லைனில் கண்டு தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தற்போது கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால், வழிபாட்டுத் தலங்களில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு மாசி மகம் திருவிழா வரும் 7ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற ஐயம் எழுந்தது.
இந்த ஆண்டு மாசி மகம் திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார். நேற்று விழா முன்னேற்பாடுகளை நேரில் ஆய்வு செய்த அவர், கோயில் வளாகம், கடற்கரை பகுதிகள், நாழிக்கிணறு, கோயில் பேருந்து நிலையம், விழா நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டப பகுதியையும் பார்வையிட்டார். தொடர்ந்து தேர்கள், தேரோட்டம் நடைபெறும் பகுதிகளையும் ஆய்வு செய்தார்.
அப்போது, செய்தியாளர்ளிடம் பேசிய அவர், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித் திருவிழா வரும் 7ஆம் தேதியன்று தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. விழாவிற்கான முன்னேற்பாடுகள் என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, கோயில் வளாகம், திருவிழா நடைபெறும் இடங்களில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் செல்லும் அனைத்து வரிசைகளும் முறைப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு, வரிசையில் செல்லும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக, ஒரே சமயத்தில் 100 நபர்கள் அமர்ந்து இளைப்பாறும் வகையில் அறை அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக முதலுதவி மையமும் உருவாக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்குச் செல்லும் பக்தர்கள் கடலில் நீராடும்போது, ஆழமான பகுதிகளுக்கு செல்லாமல் தடுக்கும் வகையில், கடலில் மிதவைத் தடுப்புகளும் அமைக்கப்படும். மேலும், இந்த ஆண்டு மாசித் திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்துமே வழக்கம் போல் நடைபெற அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதே போல், இவ்விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க பக்தர்களுக்கும் முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது, என்றும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் காண பக்தர்களுக்கு அனுமதி கிடைக்காவிட்டாலும் மாசித்திருவிழா காண அனுமதி கிடைத்துள்ளது பக்தர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.