2023 புத்தாண்டு ராசி பலன்..விமானம் ஏறி வெளிநாடு போகும் யோகம் யாருக்கு கிடைக்கும்?
சென்னை: 2022 ஆம் ஆண்டு முடிந்து 2023ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. படிக்கவும், வேலைக்காகவும் வெளிநாடு செல்ல பலர் விரும்புவார்கள். இந்த புத்தாண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்யும் யோகம் அமையப்போகிறது என்று பார்க்கலாம். சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகியவை வெளிநாட்டு கல்வி, வேலை வாய்ப்பை மேஷம் முதல் கன்னி வரை பிறந்த ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு தரப்போகிறது என்று பார்க்கலாம்.
சொந்த ஊரை விட்டு கடல் கடந்து வெளிநாடு செல்ல வேண்டும் என்று பலருக்கும் விருப்பம் இருக்கும். கிரகங்களின் சஞ்சாரம், தசாபுத்தியின் அடிப்படையிலேயே மேற்படிப்பு யோகமும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்கும். வெளிநாடு செல்லும் யோகத்தினை தீா்மானிக்கும் கிரகங்கள் சந்திரன்,குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9 மற்றும் 12 வீடுகளுடன் சோ்ந்திருந்தாலும் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் வரும்.
சந்திரன், சுக்கிரன் நீர் கோள்கள். கடல்கடந்த வெளிநாட்டு பயணத்திற்கு அவர்கள் இருவரும் காரணமாகின்றனர். ராகு, சனி காற்றுக்கோள்கள். எனவே இவையும் வெளிநாட்டு பயணத்திற்குக் காரணமாக கோள்கள். இவைகள் மட்டுமின்றி 9ஆம் அதிபதி, 12ஆம் அதிபதிகளின் நிலைமையை பொருத்தும் வெளிநாடு பயணம் அமைகிறது.
2023ஆம் ஆண்டில் கால புருஷ தத்துவப்படி சனி லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.அமர்ந்துள்ளார். தற்போது மிதுன ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் முதல் ராசியான மேஷ ராசிக்கு மே மாதம் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ராகு கேது இடப்பெயர்ச்சி அக்டோபர் மாதம் நிகழப்போகிறது. மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு ராகுவும், துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு கேதுவும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இந்த கிரக மாற்றம் எந்தெந்த ராசிக்கு வெளிநாடு செல்லும் யோகத்தை அளிக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புத்தாண்டு பொருளாதாரத்தில் ஏற்றம் தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. லாப சனியால் தொழிலில் லாபம் அதிகரிக்கப்போகிறது. திரைகடல் ஓடி திரவியங்கள் தேடி நிறைய சம்பாதித்து ,பேரும் புகழும் கிடைக்கப் பெறுவீர்கள். இதனால் உங்கள் சமுதாய அந்தஸ்தும்,மதிப்பும் மரியாதையும், உங்கள் பொருளாதாரமும் முன்னேற்றமடையப்போகிறது. மே மாதம் நடைபெற உள்ள குரு பெயர்ச்சி சில சாதகமான பலன்களை தரப்போகிறது. குரு உங்கள் ராசிக்கு வந்து அமர்ந்து அங்கிருந்து 5,7,9 ம் இடங்களை பார்த்து இந்த இடங்களுக்கு நன்மை செய்கிறார். வெளிநாடு செல்ல வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்திருந்தவர்களின் கனவு நனவாகப் போகிறது. ராசியில் உள்ள ராகு உடன் இணையப்போகும் குரு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார்.
ரிஷபம்
சுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் இருந்து உங்களுக்கு சாதகமான பலன்களை தந்து கொண்டு இருக்கிறார். வாகனம் வாங்கக்கூடிய யோகமும், லட்சுமி கடாட்சத்தால் பொன், பொருள் சேர்க்கையும், அரசாங்க உதவியும் கிடைக்கும். தொழில் இடமாற்றம் ஏற்படும். மே மாதம் குரு பெயர்ச்சிக்குப் பின்னர் நிறைய சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புகள் வரும். உயர் பதவியும்,சம்பளமும் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். படிப்பில் மிகுந்த கவனம் தேவைப்படும் காலம். மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண்கள் பெரும் காலம். சனி பகவான் தொழில் ஸ்தானத்திற்கு வந்து வேலை தொழிலில் நல்ல மாற்றத்தை தரப்போகிறார். 12ஆம் வீட்டில் உள்ள ராகுவும் வெளிநாட்டு யோகத்தை தரப்போகிறார்.
மிதுனம்
புத்திசாலியான புதனை ஆட்சி நாதனாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே... வரப்போகும் புத்தாண்டு ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. சனிபகவான் ஒன்பதாம் வீட்டில் பாக்ய ஸ்தானத்தில் அமரப்போகிறார். அயல்நாட்டு வியாபாரம் சூடுபிடிக்கும். வருமானமும் அதிகரிக்கும். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். படித்து விட்டு அரசு வேலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு கப்பல், விமானம், ராணுவம், தீயணைப்புத்துறையில் வேலை கிடைக்கும். படித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் சமூக அந்தஸ்தும் மதிப்பும் மரியாதையும் உயரும். பொருளாதாரம் உயரும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். சிலர் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றமும் கிடைக்கும். குருபகவான் பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். குரு பத்தில் வரும் போது பதவி பறிபோகும் என்ற கூற்று உள்ளது. அதன்படி சிலருக்கு வேலைப்பளு கூடும். சிலருக்கு விரும்பிய இடங்களுக்கு பணி இடமாற்றம் இருக்கும். மே மாதத்திற்குப் பிறகு குரு பகவானும் லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். லாப ராகுவும் செய்யும் தொழிலில் வருமானத்தை கொட்டிக்கொடுக்கப்போகிறார்.
கடகம்
சந்திரனை ஆட்சி நாதனாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே... உங்கள் ராசிக்கு கண்டச்சனி முடிந்து அஷ்டமத்து சனி ஆரம்பிக்கப்போகிறது. எதிலும் அகலக்கால் வைக்காதீர்கள் அவஸ்தைப்படுவீர்கள். இருக்கிற வேலையில் கவனமாக அமைதியாக இருப்பது நல்லது. வேலையை விட்டு விட்டு வேறு வேலை தேட வேண்டாம்.
மே மாதம் வரை குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் பொருளாதார நிலை மேம்படும். எந்த காரியத்தையும் எளிதில் செய்து முடித்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்கள் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கு ஏற்றபடி வேலை வாய்ப்பு கிடைக்கும். வெளியூர் வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்புவர்களின் நோக்கம் நிறைவேறும். மே மாதத்திற்குப் பிறகு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள். அஷ்டமச்சனியால் ஏற்படும் பாதிப்பை குறைத்து கொள்ள காலபைரவரை சனிக்கிழமை சனிக்கிழமை சென்று வழிபட்டு வரலாம். சனி காலபைரவர் சொன்னால் தான் கேட்பார். சனியின் குருநாதர் இந்த காலபைரவர், ஆஞ்சநேயருக்கும் சனிக்கிழமை நெய்விளக்கு போட்டு வர சனியால் வரக்கூடிய அத்துனை தொல்லைகளையும் விலக்க முடியும்.
சிம்மம்
சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு பேரும் புகழும் கிடைக்கப்பெரும் வருடமாக இந்த 2023ஆம் ஆண்டு இருக்க போகின்றது. குருபகவான் எட்டாம் வீட்டில் இருந்து 12ஆம் வீட்டினை பார்க்கிறார். இந்த ஆண்டில் குருபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்து உங்கள் ராசியை பார்க்கப்போகிறார். ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்று சொல்வார்கள் ஒன்பதாம் இடத்து குரு உங்களுக்கு நல்ல பெயரையும், தொழிலில் லாபங்களையும் அள்ளித்தரப்போகிறார். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கும் இளைஞர்கள் வெளிநாடு செல்ல முடியும். உங்கள் ராசிக்கு கிடைக்கும் குருவின் பார்வையால் செய்யும் தொழிலில் அபாரமான லாபமும் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்து விடும். பதவி உயர்வு, தொழில் முன்னேற்றம், தொழில் பாராட்டுகளும் ,பேரும் புகழும் கிடைக்கும். உங்களுக்கு தரப்பட்ட டார்கெட்டை முடித்து வேலை செய்யும் இடத்தில் புகழப்படுவீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் உண்டாகும். ராகு பதினொன்றில் இருப்பதால் வெளிநாடு சென்று லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும். மாணவர்கள் படிப்பில் அக்கறையும் ஆர்வமும் செலுத்துவீர்கள். நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று வெளிநாடு சென்று படிக்கும் யோகம் தேடி வரும். அக்டோபர் மாதத்தில் ராகு 8ஆம் வீட்டிலும்,கேது 2ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். ராகு எட்டில் மறைவது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் ஆகும். தொழில் ஸ்தானத்திற்கு பதினொன்றாம் இடம் இந்த எட்டாம் இடம். எனவே செய்யும் தொழில் சிறப்படையும். தொழிலில் ராகுவால் லாபங்கள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். காலேஜ் படிக்கும் மாணவர்களுக்கு யோகமான ஆண்டாக அமையும் சிலருக்கு மேல்படிப்பு யோகம் அமையும். வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம்.
கன்னி
அறிவின் நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே..சனி பகவான் ஆறாம் வீட்டிற்கு வரப்போவது அற்புதம். உங்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. உங்களுடைய எதிரிகள் கூட உங்களிடம் சரணடைவார்கள். மீன ராசியில் உள்ள குருவின் பார்வை மே மாதம் வரை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் வெளிநாட்டிற்கு செல்லும் யோகம் தேடி வரும். மே மாதம் குருபகவான் அஷ்டம ஸ்தானத்திற்குச் செல்கிறார். அயல்நாடு வியாபாரம் கைகூடி வரும் என்றாலும் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. இந்த காலங்களில் புதிய தொழில் முயற்சிகள் வேண்டாம். பேராசை படவேண்டாம். அகலக்கால் வைப்பது ஆபத்து. விளையாட்டுத்தனமாக இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. அக்டோபர் மாதம் முதல் ராகுவும் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுவதால் வெளிநாடு செல்லும் யோகம் தேடி வரப்போகிறது.